திங்கள், 15 நவம்பர், 2010

பூமியின் கூரை


பூமியின் கூரை!

www.orkadavul.com
சூரியன் என்பது நாம் வசிக்கும் பூமியைவிட பல மடங்கு அளவில் மிகப்பெரிய நெருப்புப் பந்து. அதனுள்ளே மிகப்பெரிய அணு உலையே இருக்கின்றது. அதில் வினாடிக்கு 500 டன் எடையுள்ள ஹைட்ரஜன் வாயுக்கள் எரிந்து ஹீலியம் வாயுக்களாக மாறுகிறது. அதனால் படுபயங்கரமான கதிர்கள் சூரியனிலிருந்து ஆகாய வெளியெங்கிலும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கிறது.

இந்த பிரமாண்டமான அணு உலையிலிருந்து பாய்ந்து வரும் கதிர்களுள் ‘புற ஊதாக் கதிர்களும்’ ஒன்று. இது மனிதர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து உயிரினங்களுக்கும் பெரும் கேடு விளைவிக்கும் நாசக்கதிர்களாகும். இக்கதிர்கள் நம்மீது படுமானால் நாம் பல்வேறு கேடுகளுக்கு ஆளாகி அழிவைச் சந்திக்க நேரிடும். சரி அப்படியானால் சூரியனிலிருந்து ஆகாயமெங்கிலும் பாய்ந்தோடிச் செல்லும் இந்த அழிவுக் கதிர்கள் ஏன் நமது பூமியைத் தாக்குவதில்லை? என்ற கேள்வி எழலாம்.

நிச்சயமாக கண்ணிமைக்கும் நேரம் கூட தவறாமல் பூமியைத் தாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், தான் படைத்த உயிரினங்களின் மீது அளவற்ற கருணையுடைய இறைவன் அந்த அழிவுக் கதிர்கள் நம்மீது படாதவாறு தடுத்து வானத்தில் ஓர் கூரையை ஏற்படுத்தி இருக்கிறான். இந்தக்கூரை என்னவென்று பார்ப்போம்.

பூமியின் வளிமண்டலம்: -
நமது புமியைச் சுற்றி மேற்பரப்பில் 500 கி.மீ. உயரம் வரை பரவியிருக்கும் இந்த காற்று மண்டலம் (Atmosphere) பல்வேறு அடுக்குகளாக (Layers) அமைந்துள்ளது. இந்த காற்று மண்டலத்தில் நைட்ரஜன் என்ற வாயு பெருமளவும் 78.03%, ஆக்ஸிஜன் 20.99%, ஆர்கான் 0.94%, கார்பன்-டை-ஆக்ஸைடு 0.03%, ஹைட்ரஜன் 0.01% போன்ற வாயுக்களும், இதைத்தவிர நீராவி மற்றும் தூசிகள் போன்ற பொருட்களும் கலந்துள்ளன. இந்த காற்றுவெளி மண்டலத்தின் முக்கிய பணிகள் என்னவெனில்:

- இதில் உள்ள ஆக்ஸிஜன் அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு சுவாசக்காற்றாக இருக்கிறது.
- இதில் உள்ள நைட்ரஜன் பூமியில் உள்ள அனைத்து தாவரங்களும் உயிர்வாழ, வளர உதவுகிறது.
- கார்பன்-டை-ஆக்ஸைடு தாவர வர்க்கங்கள் உயிர்வாழ இன்றியமையாததாக இருக்கிறது.
- இதில் உள்ள ஓஸோன் என்பது சூரியனிலிருந்து பாய்ந்து வரும் புற ஊதாக்கதிர்களை பூமியைத் தாக்காவண்ணம் காக்கின்றது.

ஓசோன் வாயு மண்டலம்: -
ஓஸோன் வாயு மண்டலம் என்பது, பூமியிலிருந்து இரண்டாவதாக உள்ள Straposphere என்ற அடுக்கில் பரவியுள்ள மெல்லிய அடுக்காகும். இதற்கு Ozonosphere என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். ஓஸோன் என்பது பிராண வாயுவின் மூன்று அணுக்களால் ஆன மூலக்கூறு (Molecule) அடங்கிய வாயுவாகும். பூமியில் காணப்படும் ஓசோன் வாயுக்களில் 90 சதவீதம் இந்த ஓசோன் வாயுமண்டலத்தில் தான் காணப்படுகின்றது.

ஓசோன் வாயுமண்டலத்தை முதன் முதலில் 1913 ஆம் ஆண்டு கண்டறிந்தவர்கள் சார்லஸ் ஃபேப்ரி மற்றும் ஹென்ரி பியூசன் (Charles Fabry and Henri Buisson) என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அறிஞர்கள் ஆவார்கள். இந்த ஓசோன் வாயு மண்டலம் சூரியனிலிருந்து கணநேரம் கூட தவறாமல் பூமியை நோக்கி பாய்ந்து வரும் நாசக்கதிர்களான புற ஊதாக்கதிர்களை 97 முதல் 99 சதவீதம் வரை உட்கிரகித்துக் கொண்டு, பூமிக்கு ஒரு கூரையாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அறிஞர்கள் சூரியனின் புற ஊதாக்கதிர்களை மூன்று வகையினதாகப் பிரிக்கின்றனர்.
1) புற ஊதாக்கதிர் வகை- UV- A2) புற ஊதாக்கதிர் வகை- UV- B3) புற ஊதாக்கதிர் வகை- UV – C
முதலாவது வகையான என்பது அதிக பாதிப்பை ஏற்படுத்தாததும் சிறிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதுமாகும். இதில் பெரும்பாலானவைகள் பூமியின் மேற்பரப்பை வந்தடைகிறது.
இரண்டாவது வகையான UV- B என்பது நமது தோல்களைப் பாதித்து Sun Burn மற்றும் தோல் புற்றுநோயை (Skin Cancer) ஏற்படுத்தக் கூடியதாகும். இது பெரும்பாலும் ஓசோன் வாயு மண்டலத்தினால் தடுக்கப்பட்டுவிடுகிறது. இருப்பினும் சிறிய அளவிலான இவ்வகை புற ஊதாக் கதிர்கள் பூமியை வந்தடைகின்றது.

மூன்றாவது வகையான UV- C என்பது மனிதர்களுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடிய நாசக் கதிர்களாகும். இது பூமியின் மேலே 35 கீ.மீ. தூரத்தில் உள்ள ஓசோன் வாயுக்களினால் முற்றிலுமாக தடுக்கப்படுகின்றது.

மனிதர்களுக்குப் பெரும் கேடு விளைவிக்கும் இந்த வகை புற ஊதாக்கதிர்களை அல்லாஹ் படைத்திருக்கின்ற ஓசோன் வாயு மண்டலம் தடுத்து பூமிக்கு ஒரு கூரையாக செயல்படுவதை அறிய முடிகிறது.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: -
“-இன்னும் வானத்தை நாம் பாதுகாக்கப்பட்ட கூரையாக ஆக்கினோம் – எனினும் அவர்கள் அவற்றிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணித்து விடுகிறார்கள்” (அல்குர்ஆன்: 21:32)

இந்த வசனத்தில் பாதுகாக்கப்பட்ட கூரை எனக் கூறப்படுகிறதே, அப்படியானால் இந்தக் கூரைக்கு ஏதேனும் ஆபத்து காத்திருக்கிறதா என்று கேட்டால் ஓஸோன் என்ற கூரைக்கும் ஆபத்துகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். அவைகளைப் பற்றிப் பார்போம்.

ஒசோன் வாயு உற்பத்தி செய்யப்படும் விதம்: -
சூரியனின் புற ஊதாக் கதிர்களினால் துண்டப்பட்ட ஆக்ஸிஜனின் மூலக்கூறுகள் O2 ஒற்றையாக உள்ள ஆக்ஸிஜன் O மூலக் கூறுடன் இணைந்து, ஓசோன் வாயுவாக O3 மாறுகிறது. இவ்வாறு ஒசோன் வாயுவாக O3 மாறிய இந்த வாயு தொடர்ந்தார் போல் வீசிக் கொண்டிருக்கும் புற ஊதாக்காதிர்களின் தாக்கத்தினால் தாக்குப்பிடிக்கப்பட முடியாமல் சிதைந்து மீண்டும் ஆக்ஸிஜன் வாயுO2 மூலக்கூறுகளாகவும் தனிமையான ஆக்ஸிஜன் மூலக்கூறு O ஆகவும் மாறுகிறது. பின்னர் இவை புற ஊதாக்கதிர்களினால் மீண்டும் ஓசோன் மூலக்கூறாக O3 மாறுகிறது. இவ்வாறாக இந்த சுழற்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேலும் பல காரணங்களினால் ஓஸோன் வாயுவின் மூலக்கூறு O3 என்பது தாமாகவே சிதைந்து O2 (ஆக்ஸிஜன்) என்னும் மூலக்கூறு ஆக மாறுகிறது. பூமியில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயுக்களும் ஓசோன் வாயுவின் மூலக்கூறுகளைச் சிதைக்கக் கூடியதாக இருக்கிறது. இதனால் இந்த ஓஸோன் வாயு மண்டலத்தில் ஏற்படும் O3 வாயுவின் பற்றாக்குறையைப் போக்குவதற்காக இறைவன் அதற்கு மாற்று ஏற்பாட்டைச் செய்து அதனைப் பாதுகாக்கின்றான். எப்படியென்றால் பூமியில் எந்த நேரத்திலும் ஏற்படும் இடி, மின்னல்கள் இந்த ஓஸோன் வாயுவை உற்பத்திச் செய்து புதுப்பித்துக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இடி-மின்னல்கள் நைட்ரிக் ஆக்ஸைடு என்ற வேதிப்பொருட்களைத் தோற்றுவிக்கின்றது. இந்த வேதிப்பொருட்கள் சூரிய ஒளியிலுள்ள மற்ற வேதிப்பொருட்களுடன் இணைந்து வேதிவினை மாற்றத்தின் மூலம் ஓசோன் வாயுவைத் தோற்றுவிக்கிறது என்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் மிகத் தூயவன்) இடி, மின்னலுக்கு இப்படி ஒரு ஆற்றலை அல்லாஹ் தந்திருக்கிறான்.

பூமியின் காந்த மண்டலம் (Earth’s Magnetosphere): -
அடுத்ததாக ஓஸோன் மண்டலத்திற்கு மட்டுமல்லாது, நமது பூமி மற்றும் பூமியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்திற்கே வரும் ஆபத்து என்னவெனில், காற்று மண்டலத்திற்கு அப்பாலுள்ள எல்லையற்ற ஆகாய வெற்றுவெளியில் இந்த காற்று மண்டலம் முழுவதுமே சிதறுண்டு போகும் அபாயமாகும். இதுநாள் வரையிலும் பூமியின் புவியீர்ப்பு விசையே நமது காற்றுமண்டலத்தை அவ்வாறு சிதறுண்டு போய்விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கருதிக் கொண்டிருந்தனர். ஆனால் இன்றைய நவீன விஞ்ஞானிகள் சூரியனின் வெப்பக்கதிர்களால் மிக அதிக அளவில் வெப்பமடையும் இந்த வாயுக்களைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் சக்தி பூமியின் ஈர்ப்புச் சக்திக்குக் கிடையாது என்கின்றனர்.
அப்படியானால் நாம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான பிராணவாயுவையும் நமக்கு கூரையாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஓஸோன் வாயு மண்டலத்தையும் இந்த பரந்த ஆகாய வெற்றுவெளியில் சிதறுண்டு போய்விடாமல் பாதுகாக்கும் சக்தி எது என தேடிய விஞ்ஞானிகளுக்கு புலப்பட்டது தான் பூமியின் காந்த மண்டலம் (Earth’s Magnetosphere).

20-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியினால் விண்ணில் செலுத்தப்பட்ட தொழில்நுட்பம் வாய்ந்த தொலைநோக்கிகளினாலும், இன்னும் பல அரிய கருவிகளினாலும் ஆராய்ந்ததில், இந்த வாயு மண்டலத்தை, இந்த பிரபஞ்சத்தின் வெற்றுவெளியில் சிதறாமல் காப்பது பூமியின் மேற்பரப்பில் 70,000 கிலோ மீட்டர் வரை பரவியிருக்கும் பூமியின் காந்த மண்டலமே என்று கண்டறிந்தனர். இதை சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

இந்த பிரபஞ்சம் ஈர்ப்பு விசை மற்றும் காந்த விசைப் போன்ற பல சக்திகளைக் கொண்டுள்ளது.

அல்லாஹ்வும் தன் திருமறையில் கூறுகிறான்:-
“மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றல் உடையோராவோம்” (அல்குர்ஆன்:51:47)
சூரியன் அதிவேகத்தில் சுழல்வதால் அதிலிருந்து ஏற்படும் காந்தசக்தி ஆகாய வெளியெங்கிலும் பரவியுள்ளது. சூரியனின் காந்த சக்தி எல்லைக்குள் இருக்கும் பூமியும் அதிவேகத்தில் சுழல்வதனால் பூமியைச் சுற்றிலும் காந்தசக்தி ஏற்படுகிறது. இது பூமியிலிருந்து உயரே செல்ல செல்ல குறைந்து கொண்டே வந்து இறுதியில் ஒரு நிலையான காந்தசக்தியைக் கொண்டிருக்கும். பூமியின் காந்தசக்தியின் எல்லைக்கப்பால் இருப்பது சூரியனின் காந்தசக்தியாகும். சரி இனி இந்த காந்தசக்தி பூமியின் காற்று மண்டலத்தை எவ்வாறு பாதுக்காக்கின்றது எனப் பார்ப்போம்..

காற்று மண்டலத்தில் உள்ள வாயுக்களின் அணுக்கள் சூரியனின் வெப்பக்கதிர்களால் தாக்கப்படுவதோடு அல்லாமல், சூரியனின் ஒளிக்கற்றைகளிலிருந்து மின்சாரத்தையும் பெற்று மின்னூட்டம் பெற்ற அணுக்களாகின்றன. (Electrically Charged Particles) மின்னூட்டம் பெற்ற காற்று மண்டலத்தின் இந்த துகள்களை பூமியின் சக்திவாய்ந்த காந்த மண்டலம் தன்வசம் இழுத்து அவைகள் பரந்து விரிந்த ஆகாய வெற்றுவெளியை நோக்கிச் சென்று சிதறுண்டு விடாமல் பாதுகாத்துக் கொள்கிறது.

மேலும் சூரியனிலிருந்து பூமியை நோக்கி தொடர்ந்து பாய்ந்துக் கொண்டிருக்கும் அழிவுக் கதிர்களையும், அவ்வப்போது சூரியனிலிருந்து வீசும் சூரியப் புயலின் வேகத்தையும் பூமியின் காந்த மண்டலம் தடுத்துக் கொண்டு ஒரு கூரையாக செயல்படுகிறது.

அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி சிந்தித்துப் பாருங்கள்:-
“இன்னும் வானத்தை பாதுகாக்கப்பட்ட கூரையாக ஆக்கினோம்”என்று கூறி நம்மை பாதுகாக்கும் இறைவன் மிகவும் கருனையாளன் அன்றோ?

விண்கற்களினால் பூமிக்கு ஆபத்து!: -
அல்குர்ஆன் 21:32 வசனத்தில் பொதிந்துள்ள மற்றுமொரு சான்றினைப் பார்ப்போம்.
இந்த சூரியக்குடும்பம் உருவான காலகட்டத்தில் அவை மிகப்பெரிய நட்சத்திரம் (Parent Star) ஒன்றிலிருந்து தோன்றியது என வானவியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். அப்போது சூரியன் மற்றும் அதைச் சுற்றிவரும் கோள்களுடன் கோடிக்கணக்கான விண்கற்களும் தோன்றின. அக்கற்களும் சூரியனின் ஈர்ப்புச்சக்திக்கு உட்பட்டு சூரியனைச் சுற்றி வருகின்றன. அவைகளில் சிறியதும் பெரியதுமாக சில மில்லி மீட்டர் முதல் பல கிலோ மீட்டர் விட்டமுடைய கற்கள் இருக்கின்றன. இவைகளில் பெரிதாக இருக்கும் கற்களுக்கு (Asteroids) ஆஸ்டெராயிட்ஸ் என்றும், சிறிய கற்களை (Meteoroids) மீட்டியராய்ட்ஸ் என்றும் அழைக்கிறார்கள். இவைகள் ஒரு பெரும் கூட்டமாக செவ்வாய் கிரகத்திற்கும், ஜுபிடர் என்ற கிரகத்திற்கும் இடையில் ஒரு பெல்ட்டைப்போல இருந்து கொண்டு சூரியனைச் சுற்றி வருகின்றன. இதற்கு ‘ஆஸ்ராயிட்ஸ் பெல்ட்’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். சில நேரங்களில் இவைகளிலிருந்து சில கற்கள் விலகிச் செல்கின்றன. இவ்வாறு விலகிச் செல்லும் இக்கற்களை பூமியானது தன்னுடைய ஈர்ப்பாற்றலால் தன் வசம் இழுப்பதால் அக்கற்கள் பூமியை நோக்கி மிக வேகமாக வருகின்றன.

மேலும் வால்நட்சத்திரம் என்று சொல்லப்படக்கூடிய Comets சென்ற பாதைகளில் ஏராளமான சிறுசிறு கற்கள் கோடிக்கணக்கில் காணப்படுகிறது. பூமி சுழன்று கொண்டே வால்நட்சத்திரம் கடந்து சென்ற பாதைகளில் நகரும்போது அப்பாதைகளில் உள்ள கோடிக்கணக்கான துகள்களும், கற்களும் பூமியின் ஈர்ப்பாற்றலினால் இழுக்கப்பட்டு ஷவரிலிருந்து கொட்டும் நீரைப்போல பூமியை நோக்கிக் கொட்டுகிறது. இதற்கு ஆங்கிலத்தில் மீட்டியர் ஷவர் என்று (Meteor Shower) கூறுவர்.

இவ்வாறு பல வகைகளில் பூமியை நோக்கி பல கோடிக்கணக்கான கற்கள் விழுந்தவண்ணம் இருக்கின்றன. ஒரு ஆண்டிற்கு 215,000 டன் எடையுள்ள கற்கள் பூமியை நோக்கி வருவதாக கணக்கிட்டுள்ளனர். வானத்திலிருந்து கொட்டப்படும் கோடிக்கணக்கான கற்களில் ஒன்றுகூட நம்மீது விழவில்லையே? அவற்றை நம்மீது விழாமல் தடுப்பது எது? என்று ஆச்சரியத்தோடு வினா எழுப்பினால் அதற்கும் விடை தருகிறார்கள் விஞ்ஞானிகள். பூமியைச் சுற்றியுள்ள வளிமண்டலமே கூரையாக அமைந்து அக்கற்கள் நம்மீது விழாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.

எப்படி என்கிறீர்களா? தன் பாதையிலிருந்து விலகிய கற்கள் பூமியின் ஈர்ப்பாற்றலினால் இழுக்கப்பட்டு மிக அதிக வேகத்தில் பூமியை நோக்கிப் பாய்ந்தோடி வரும்போது அவைகள் பூமியின் காற்று மண்டலத்தை கடந்து வரவேண்டியதிருக்கிறது. அதிவேகமாக வரும் கற்கள் காற்று மண்டலத்தில் உராயும்போது ஏற்படும் அளவுக்கதிகமான வெப்பத்தினால் அக்கற்கள் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகி விடுகின்றன. ஒரு சில கற்களே பாதி எரிந்தும் பாதி எரியாத நிலையிலும் பூமியை வந்தடைகின்றன. இவ்வாறு பூமியில் விழும் கற்கள் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு அவர்களின் ஆய்விற்கு பெரிதும் உதவுகின்றன.
இப்போது நினைத்துப் பாருங்கள். வருடத்திற்கு 215,000 டன் எடையுள்ள கற்கள் பூமியின் மீது பாய்ந்தோடி வந்து கொண்டிருக்கும் நிலையில் அவைகளிலிருந்து இறைவன் நம்மைக் காப்பதற்காகவும் வளிமண்டலம் எனும் வானத்தை கூரையாக படைத்திருக்கின்றான்.

மேலும் இறைவன் கூறுகிறான்.
“மேலும், வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை” (அல்குர்ஆன்: 44:38)
அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.

புதன், 10 நவம்பர், 2010

வானத்திலிருந்து இறக்கப்பட்ட இரும்புகள்!

WWW.ORKADAVUL.COM
சூரியக் குடும்பம் உருவான காலகட்டத்தில் பூமியில் இரும்புக்கான தாதுப் பொருட்களே இல்லை என்றும் அதன் பின்னரே விண்கற்கள் மழையாகப் பொழியப்பட்ட காலத்தில் வானிலிருந்து இந்த இரும்புகள் பூமிக்கு வந்திருக்கின்றன என்று நவீன வானவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். இதைப்பற்றி சிறிது விரிவாக பார்ப்போம்.

சூரியக் குடும்பத்தின் ஆற்றல் (Energy of Solar system) இரும்பை உறுவாக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கவில்லை. இரும்பின் ஒரு அணுவை உருவாக்குவதற்கு இந்த சூரியக் குடும்பத்தின் மொத்த ஆற்றலைப்போல நான்கு மடங்கு ஆற்றல் (Four Times energy of Entire solar System is Required to Produce a Single Atom of Iron) தேவைப்படுகிறது. எனவே பூமியில் உள்ள இரும்புகள் எங்கிருந்தோ வானத்திலிருந்து வந்திருக்க வேண்டும் என்கின்றனர் NASA விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.

தற்கால அறிவியலாளர்கள், தற்போது பூமியில் காணப்படும் இரும்புகள் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் சூரியனை விடப் பன்மடங்கு பெரிதாகவிருந்த ஒரு நட்சத்திரம் வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட துகள்கள் சூரியக் குடும்பத்தில் உள்ள பூமியின் ஈர்ப்பாற்றலினால் இழுக்கப்பட்டு அதனோடு மோதி பூமியில் இரும்புக்கான தாதுப்பொருட்கள் பரவலாக கிடைக்க வழி வகுத்தது என்று கூறுகிறார்கள்.

இந்த அறிவியலாளர்கள் மேலும் கூறுகையில், ஆரம்பத்தில் இளகிய நிலையில் இருந்த இந்த பூமி தற்போதுள்ள அளவை விட மிகச் சிறியதாக இருந்ததாகவும் இரும்பின் தாதுப்பொருட்கள் அடங்கிய மிகப்பெரிய ஆஸ்ட்ராயிட்ஸ் எனப்படும் விண்கற்கள் 10 க்கும் மேற்பட்டவைகள் பூமியில் மோதியதாகவும் ஒவ்வொரு தடவையும் மோதும் போது பூமி தன் அளவில் பெரியதாக ஆனதாகவும் கூறுகிறார்கள்.

பூமி, சந்திரன், சூரியன் இவைகளெல்லாம் மிகப்பெரிய வெடிப்பின் மூலம் (Big Bang) தோன்றியது என்பதை நாம் அறிவோம். இவ்வாறு வெடித்துச் சிதறியதால் பூமி, சந்திரன் மற்றும் சூரியன் தோன்றிய அதே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான சிறியதும், பெரியதுமான விண்கற்கள் (Asteroids and Meteoroids) தோன்றி அவைகளும் இப்பரந்த விண்வெளியில் சுற்றித் திரிகின்றன.

பெரிய கற்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வதால் அவைகள் வெடித்துச்சிதறி புதிய புதிய கற்கள் தோன்றிய வண்ணம் இருக்கின்றன. அவைகள் அவ்வபோது பூமி, சந்திரன் ஈர்ப்பாற்றலினால் இழுக்கப்பட்டு இவைகளின் மீது மோதுகின்றன.

பூமி உருவான காலகட்டத்தில் பூமியின் மீது தொடர்ச்சியாக விண்கல்மாரிகள் பொழிந்தவண்ணமாக இருந்தது. இந்தக் காலகட்டத்தை (Bombardment Period) என்று கூறுவர். விழுந்த கற்களில் பல்வேறு தாதுப்பொருட்கள் இருந்தது. இவ்வாறு விண்ணிலிருந்து வந்த விண்கற்கள் மூலமாக கிடைத்ததே இந்த பூமியிலுள்ள இரும்புகள் அனைத்தும் என்கின்றனர் வல்லுனர்கள்.

தற்போது அவ்வபோது இந்த மாதிரி விண்ணிலிருந்து விண்கற்கள் மூலமாக இரும்புகள் பூமியை நோக்கி வந்தவண்ணம் இருப்பதாகக் கூறும் விஞ்ஞானிகள் இதற்கு ஆதாரமாக 1947 ஆம் ஆண்டு ரஷ்யாவில் விழுந்த விண்கல்லை (Meteorite) காட்டுகின்றனர். இக்கல்லில் நான்கு சதவிகிதம் நிக்கல் என்ற பொருளும் ஏனைய பெரும்பகுதி இரும்பாகவும் இருந்ததாகக் கூறுகின்றனர்.

பூமியில் காணப்படும் இரும்புகள் அனைத்தும் பூமியில் தாமாகவே உருவாகவில்லை! மாறாக வானத்தில் வேறு எங்கிருந்தோ பூமியை நோக்கி வந்தது என்பது தற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான உண்மையாகும்.
ஆனால் இந்தப் பேருண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அனைத்துலகங்களைப் படைத்த அந்த இறைவன் உலக மாந்தர்களுக்கெல்லாம் நேர்வழிகாட்டிட அவன் இறக்கியருளிய அவனுடைய சத்தியத் திருவேதத்திலே இதைக் குறித்து குறிப்பிட்டு மக்கள் சித்தித்து தெளிபெறுமாறு அறிவுறுத்துகிறான்.

அல்லாஹ் கூறுகிறான்: -
“நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம்; இன்னும், இரும்பையும் இறக்கினோம். அதில் கடும் அபாயம் இருக்கிறது; எனினும் (அதில்) மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன – (இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாகவும் உதவி செய்பவர் எவர் என்பதையும் (சோதித்து) அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன்” (அல்குர்ஆன்: 57:25)

வியாழன், 4 நவம்பர், 2010

பூமி – வாழ்வதற்கு ஏற்ற இடம்

பூமி – வாழ்வதற்கு ஏற்ற இடம்!

www.orkadavul.com
இந்தப் பிரபஞ்சத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த இடங்களும், உயிரினங்கள் வாழத் தகுதியற்ற இடங்களும் இருக்கின்றன. உதாரணமாக நமது சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்களில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழத் தகுந்த சூழ்நிலை இருக்கிறது. பிற கோள்களில் மிக அதிக வெப்பம் அல்லது குளிர் மற்றும் காற்று இல்லாமையின் காரணமாக உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியற்றதாக இருக்கின்றது.

நமது சூரியக்குடும்பத்தில் பூமி அல்லாது மெர்குரி, வீனஸ், செவ்வாய், ஜுபிடர், வியாழன், புளுட்டோ போன்ற கோள்கள் இருப்பதை நாம் அறிவோம். அனால், அவைகளிலெல்லாம் உயிரினங்கள் இல்லை என்கின்றனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். இதற்கு காரணம் அவைகளில் உயிரினங்கள் வாழ்வதற்குரிய உயிராதாரங்களும், உயிர் வாழ்வதற்கேற்ற தகுந்த சூழ்நிலைகளும் இல்லாமையே.

உதாரணமாக சூரியனுக்கு அருகிலுள்ள கோள்களான மெர்குரி மற்றும் வீனஸ் ஆகியவற்றை எடுத்துக் கொண்டால் இவைகளின் சராசரி பகல்நேர வெப்பநிலை 430 டிகிரி சென்டிகிரேடுக்கும் அதிகமாக இருக்கிறது. (பூமியின் சராசரி கோடைக்கால வெப்பநிலையே வெறும் 42 டிகிரி சென்டிகிரேடு தான். இதையே நாம் தாங்கிக்கொள்ள அதிகம் சிரமப்பட வேண்டியதாக இருக்கிறது. மேலும், மெர்குரியில் அதனின் வலுவில்லாத ஈர்ப்பாற்றலால் அங்கு வளிமண்டலமே (Atmosphere) இல்லை. அதனால் அங்கு சுவாசக்காற்று இல்லை. வீனஸில் வளிமண்டலம் இருந்தாலும் அவை பூமியின் வளிமண்டலத்தை விட 90 மடங்கு அதிகம் அழுத்தம் வாய்ந்ததாக இருக்கின்றது.

பூமியின் துணைக்கோளான சந்திரனை எடுத்துக் கொண்டால் அதில் பகல் நேர சராசரி வெப்பநிலை 125 டிகிரியாகவும், இரவு நேர வெப்பநிலை -175 டிகிரியாகவும் இருக்கிறது. பூமிக்கு அடுத்ததாக இருக்கும் இரண்டு நிலவுகளுடைய (Moons) செவ்வாய் கிரகத்தின் சராசரி வெப்பநிலை 120 டிகிரி முதல் +25 வரை இருந்த போதிலும் இதில் மிக இலேசான அழுத்தமுடைய காற்று மண்டலமே இருக்கிறது. பூமியின் காற்று மண்டலத்தில் மூன்றில் ஒரு பாகமே அழுத்தமுடையதாக இருக்கும் இதில் உயிரினங்கள் வாழத் தகுதியற்ற விஷ வாயுக்களும் அடங்கியிருக்கின்றன.

செவ்வாய் கிரகத்திற்கு அடுத்ததாக இருக்கும் கோள்களான ஜுபிடர், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய யாவும் வாயுக்களான கோள்களாகும். இவைகள் மிகப்பெரிய வாயுக்கள் அடங்கிய பந்துகளாகும். எனவே, இவைகளும் உயிரினங்கள் வாழத் தகுதியற்றதாக இருக்கிறது. அடுத்ததாக இருக்கும் புளுட்டோ என்ற கோள் சூரியனுக்கு மிக மிக அதிக தொலைவில் இருப்பதால் அதன் வெப்பநிலை -250 சென்டிகிரேடாக இருக்கிறது. இவ்வாறு சூரியக்குடும்பத்திலுள்ள கோள்களில் பூமியைத்தவிர மற்ற யாவுமே உயிரினங்கள் வாழத் தகுதியற்றதாக இருக்கும் நிலையில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற வசதிகள் இருப்பதை அறியலாம்.

இந்த அனைத்துக் கோள்களையும் உள்ளடக்கிய அகிலங்களின் இறைவனான அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்: -

“அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்; ஆகவே, அதன் பல மருங்குகளிலும் நடந்து அவனுடைய உணவிலிருந்து புசியுங்கள்; இன்னும் அவனிடமே (யாவரும்) உயிர்த்தெழ வேண்டியிருக்கிறது” (அல்குர்ஆன்: 67:15)
அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.

பூமியின் நீரூற்றுக்களில் ஓடுவது மழை நீரே..

பூமியின் நீரூற்றுக்களில் ஓடுவது மழை நீரே!
www.orkadavul.com
பூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே என்ற உண்மையை பிரதிபலிக்கும் வசனம் ...

“நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்கி, அதனை பூமியின் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான். அதன்பின், அதனைக்கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர். பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் – நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது” (அல்குர்ஆன்: 39:21)

சிறு விளக்கம்: நாம் பள்ளிப்பாட புத்தகங்களில் நீரின் சுழற்சி (Principle of Water Cycle) என்பதைப் பற்றி படித்திருக்கின்றோம். ஆறுகள் மற்றும் கடல்களிலிருந்து நீர் ஆவியாகி, பின்னர் அந்த ஆவிகள் மேகங்களாக மாறி அந்த மேகங்கள் குளிர்ந்து மழையாக பெய்கின்றது என்றும், அந்த மழை நீரே பூமிக்குள் ஊடுருவிச் சென்று நீர் ஊற்றுக்களாக ஓடுகிறது என்றும், பூமியின் மேற்பரப்பிலுள்ள நீர் ஆறுகள் வழியாக கடலை அடைகிறது என்றும், பின்னர் மீண்டும் ஆவியாகி, மேகங்களாகி மழை பெய்கின்றது என்றும் படித்திருக்கின்றோம். இந்த வகையான நீன் சுழற்சிக்கு Water Cycle என்று பெயர்.
இதைப்பற்றி ‘The Bible, The Qura’n and Science’ என்ற உலகப் புகழ்பெற்ற ஆய்வு நூலை (தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகம் ‘விஞ்ஞான ஒளியில் பைபிலும், குர்ஆனும்’) எழுதிய டாக்டர். மாரிஸ் புகைல் (Dr Maurice Bucaille) என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அறிவியல் மேதை, ‘The Qura’n and Modern Science’ (குர்ஆனும் நவீன விஞ்ஞானமும்) என்ற தமது நூலில் பின்வருமாறு கூறுகிறார்.

‘Water Cycle’ என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. குர்ஆனில் கூறப்படுகின்ற நீரின் சுழற்சி பற்றிய வசனங்கள் இன்று நம்மிடையே உள்ள நவீன அறிவியலை ஒத்திருக்கின்றது. நாம் குர்ஆன் இறக்கி அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களிடையே இருந்து வந்த நம்பிக்கைகளைப் பார்ப்போமேயானால், வெறும் மூட நம்பிக்கைகளையும், தத்துவங்களையுமே நீரியல் பற்றிய உண்மை என்று நம்பி வந்தனர். உதரணமாக பின்வரும் குர்ஆன் வசனத்தை ஆராய்வோம்.

“நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியின் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்…” (அல்குர்ஆன்: 39:21)

இந்த வசனத்திலுள்ள அறிவியல் உண்மைகள் இன்று நமக்கு சாதாரணமாகத் தெரிகின்றது. என்றாலும் இந்த உண்மைகள் நீண்ட நாட்களாக குறிப்பாக குர்ஆன் இறக்கி அருளப்பட்ட காலத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை நாம் மறுக்க முடியாது. இந்த ‘Water Cycle’ கோட்பாட்டை Bernard Palissy என்பவர் 16-ம் நூற்றாண்டில் தான் முதன்முறையாக கண்டுபிடித்தார். இதற்கு முன்னர் வாழ்ந்த மக்கள், பிளேட்டோ என்ற தத்துவவாதியின் கருத்துக்களான ‘கடல் நீர், காற்றின் அழுத்தத்தினால் பூமியினுள் ஊடுருவிச் சென்று பின்னர் ஊற்றுகளாக மாறுகின்றது’ என்று நம்பினர்.

17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த Descartes போன்ற சிறந்த சிந்தனையாளர்கள் கூட மேற்கூறிய சித்தாந்தத்தையே உண்மை என நம்பி வந்தனர். 19-ம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்த மக்கள் கூட தத்துவமேதை எனப் போற்றப்படுகின்ற அரிஸ்டாட்டிலின் கோட்பாடான ‘மலைக்குகைகளில் பெரும் பனிக்கட்டிகள் குளிர்ந்து நீராகி, அவை பெரிய ஏரிகளாக மாறி அவைகளே பூமிக்கடியில் உள்ள நீர் ஊற்றுகளில் தண்ணீர் ஓடுவதற்குரிய ஆதாரமாக இருக்கிறது’ என்று நம்பினார்கள்.

ஆனால் இன்றுள்ள அறிவியல் வளர்ச்சியோ, ‘வானிலிருந்து பெய்த மழை நீரே பூமிக்குள் ஊடுருவிச் சென்று அவைகள் நீர் ஊற்றுகளாக ஓடுகின்றது’ என்பதைக் கூறுகின்றது. இன்றைய காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நவீன விஞ்ஞானக் கருத்தை குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே கூறிவிட்டது’ என டாக்டர் மாரிஸ் புகைல் கூறினார்.

இதுபோல் இன்னும் பல திருமறையின் வசனங்களை ஆய்வு செய்த டாக்டர் மாரிஸ் புகைல், தமது நூலின் இறுதியில் பின்வருமாறு கூறுகிறார். ‘…..நாம் எடுத்து விளக்கிய அறிவியல் உண்மைகளிலிருந்து, மனித முயற்சிகளுக்கு சவாலாக இருந்து கொண்டிருக்கும் இந்த குர்ஆன் இறைவனால் அருளப்பட்டது என்ற முடிவைத் தவிர வேறெதுவுக்கும் நம்மால் வரமுடியவில்லை.

அல்லாஹ்வும் மேற்கூறிய வசனத்தின் இறுதியில் கூறுகிறான்: “நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது” (அல்குர்ஆன்: 39:21)