புதன், 28 ஏப்ரல், 2010

ஆங்கிலத்தில்: Trained to destroy Islam தமிழில்: ஜகபர் அலி
இஸ்லாமிற்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்காக பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு சகோதரி, அதே இஸ்லாமிய கொள்கைகளினால் ஈர்க்கப் பட்டு முஸ்லிமான நிகழ்வு.."நான் இஸ்லாத்தை தழுவிய விதம் பல திட்டங்கள் அமைந்தவை. நான் ஒரு திட்டம் வகுத்தேன். நான் சார்ந்த குழுவினர் ஒரு திட்டம் வகுத்தார்கள். அல்லாஹ் ஒரு திட்டம் போட்டு என்னை இஸ்லாத்தை தழுவச் செய்தான். திட்டம் வகுப்பதில் அல்லாஹ் மிக மேலானவன்.
என்னுடைய பருவ வயதில் நான் இஸ்லாத்திற்கு எதிரான தீவிர நோக்கம் கொண்ட ஒரு குழுவினரால் ஈர்கப்பட்டேன். இவர்களில் பெரும்பாலோர் அமெரிக்க அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிப்பவர்கள். இவர்கள் இப்பதவியில் இருந்துக்கொண்டே தங்கள் நோக்கத்தை நிறைவேற்றி கொண்டிருந்தார்கள். அரசாங்கத்திற்கு சம்பந்தமில்லாமல் தங்கள் பதவிகளை தவறாக பயன்படுத்தினார்கள்.
என்னிடம் இயற்கையிலே அமைந்த துணிச்சல், தன்னம்பிக்கை பெண்ணுரிமைக்காக போராடும் தன்மையைக் கண்டு என்னை அவர்கள் அனுகி International Relations என்ற கல்விப் பயிற்சியை முடித்தால் எகிப்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றவும் அதனைக் கொண்டு அங்கு பெண்களுக்கு பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்து போராட வேண்டும் என்று அவர்கள் கூறியது எனக்கு பொருத்தாமகத் தோன்றியது.
எகிப்திய பெண்களை நான் தொலைக்காட்சியில் பார்த்ததில் அவர்கள் பளு, சுமை நிறைந்தவர்களாக கண்டதால் அவர்களை சுதந்திர இருபதாம் நூற்றாண்டிற்கு வழிகாட்ட நினைத்தேன். இஸ்லாமிய நாட்டில் இந்தப் பணியை தொடங்க இருப்பதால் நான் குர்ஆனையும், ஹதீதையும் இஸ்லாமிய வரலாறுகளையும் கற்றுக்கொண்டேன். நாங்கள் கொண்ட நோக்கப்படி இஸ்லாத்தை பற்றி பிரச்சாரத்தின் மூலம் திசை திருப்ப ஆரம்பித்தேன். அதனால் எனக்கு மிக பயமாகவும் இருந்தது.
இதை முறியடிக்க கிறிஸ்தவத்தை கற்க எண்ணி மதிப்பும் மரியாதையும் உள்ள ஒரு (Ph.D in Theology, Harvard University) பேராசிரியரிடம் அனுப்பப்பட்டேன். நான் ஒரு சிறந்த பேராசிரியரிடம் தான் கிறிஸ்தவத்தை கற்க போகிறேன் என்று நினைத்தேன். ஆனால் உண்மை அப்படி அல்ல. காரணம் அவர் ஒரு (Unitarian Christian ) அதாவது மாதா, பிதா, பரிசுத்தஆவி என்ற கிறிஸ்தவ கொள்கையில் அவருக்கு நம்பிக்கை கிடையாது. உண்மையில் ஜீஸஸ் (ஈஸா நபி) அவர்களை இறைவனின் தூதர் என்றுதான் நம்புகிறார்.இதனை நிரூபிக்க அவர் என்னிடம் பழைய பைபிள் மூல நூல்களை (Greek, Hebrew, and Aramaic) எடுத்து பைபிளில் எங்கெங்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்று என்னிடம் நிரூபித்தார்.
இதைக் கண்டதும் நான் என் கிறிஸ்தவ மதத்தின் மீது உள்ள நம்பிக்கையை இழந்தேன். இருந்த போதிலும் எந்த நோக்கத்தோடு இந்தப் பணியில் சேர்ந்தேனோ என் எதிர்கால வாழ்க்கையையும் கருத்தில் கொண்டு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் படித்து வந்தேன். இதற்கிடையில் இஸ்லாத்தை அறியும் பொருட்டு முஸ்லிம் சகோதரர்களிடம் உரையாடி வந்தேன்.என்னுடைய ஆர்வத்தை கண்ட முஸ்லிம் சகோதரர் (MSA) என்னுடைய சந்தேகங்களை களைந்து இஸ்லாத்தை மேலும் கற்றுக்கொடுத்தார். அல்ஹம்துலில்லாஹ். அச்சகோதரருக்கு மென்மேலும் அல்லாஹ் நன்மையை அளித்தருள்வானாக!ஒரு நாள் இந்த சகோதரர் என்னிடம் இருபது முஸ்லிம் சகோதரர்கள் (ஜமாஅத்) வந்திருப்பதாகவும் இஷா வேளைக்குப் பிறகு அதில் கலந்து கொள்ளும்படியும் கூறினார். நான் அங்கு சென்று கலந்து கொண்டேன். அவர்களில் ஒருவர் பாகிஸ்தானியர். அவர் அதிகம் கிறிஸ்தவத்தை அறிந்தவராயிருந்தார். நானும் அவரும் பைபிளையும், குர்ஆனையும் பல கோணங்களில் காலை பஜ்ர் நேரம் வரை கருத்து பரிமாற்றமும் விவாதமும் செய்தோம்.
மூன்று ஆண்டுகளாக நான் இஸ்லாத்தைப் பற்றி சொல்லி கொடுக்கப்பட்டேன், வாதம் புரிந்தேன், குறை சொல்லப்பட்டேன் ஆனால் யாரும் என்னை இஸ்லாத்தை தழுவ அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் இவர் என்னை இஸ்லாத்தை தழுவும்படி அழைப்பு விடுத்தார். அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் என் இதயத்தை திறந்தான். நான் முஸ்லிமாக விருப்பம் தெரிவித்து கலிமாவை மொழிந்து நிம்மதி பெருமூச்சு அடைந்தேன். நான் எனது இறுதி நாள் வரை சிறந்த முஸ்லிமாக வாழ்ந்து மரணிக்க வேண்டுமென அல்லாஹ்விடம் துஆச் செய்கிறேன். ஆமீன்!"
இஸ்லாத்தை ஏற்ற பாதிரியார்!
M.S. Rahmathulla
சவுதி அரேபியாவின் மன்னராக இருந்த ஃபஹத் பின் அப்துல் அஜீஸ் 2005-ல் மரணமடைந்தார். அவரை தலைநகர் ரியாத்தில் உள்ள பொது மையவாடியில் மிக மிக எளிமையான முறையில் அரச குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். இந்த அரிய நிகழ்ச்சி இத்தாலியில் உள்ள பிரபல கிறிஸ்துவ பாதிரியார் ஒருவரை மனமாற்றம் அடையச் செய்தது. அதைத் தொடர்ந்து அவர் தனது வாழ்வியல் நெறியாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார் என்ற தகவலை ஆக 21, 2005 அன்று வெளிவந்த அரப் நியூஸ் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

தொலைக்காட்சியில் மன்னர் ஃபஹதின் நல்லடக்கக் காட்சிகளை கண்ட பாதிரியாரை எந்தவித படாடோபமோ, ஆடம்பரமோ இல்லாமல் மிகவும் சாதாரணமாக இருபது வருடங்கள் வளமிக்க ஒரு சாம்ராஜ்யத்தை ஆண்ட மன்னரை அடக்கம் செய்யப்பட்ட நிகழ்ச்சி மிகவும் கவர்ந்தது.

ரியாத் மாநகரில் உள்ள அல்-அவ்த் என்ற மையவாடியில் மன்னர் ஃபஹத் இறந்த மறுநாள் உலக தலைவர்கள் கலந்துக் கொண்ட அவரது நல்லடக்க நிகழ்ச்சி உலகமே பார்த்து வியக்கும் வண்ணம் மிக எளிமையான முறையில் நடந்தேறியது.
இஸ்லாமிய அழைப்பாளர் டாக்டர் அப்துல்லாஹ் அல்-மாலிக் இது பற்றிக் கூறுகையில் 'எளிமையான முறையில் செய்யப்பட்ட மன்னர் ஃபஹதின் நல்லடக்கம், இந்த பாதிரியாரின் மனதில் வியக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி அவரை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்து விட்டது. அவர் ஏற்கனவே பல இஸ்லாமிய நூல்களை படித்திருந்த போதிலும் அவை இந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை' என்று குறிப்பிட்டார்.

மிக பிரபலமான இத்தாலிய பிரஜை ஒருவர் இஸ்லாத்தை தழுவுவது இது இரண்டாவது முறையாகும். நான்கு வருடங்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவிற்கான இத்தாலிய தூதுவராக ரியாதில் பணியாற்றிய டார்குவாடோ கார்டில்லி என்பவர் இஸ்லாமிய மார்க்த்தை ஏற்றுக் கொண்டார்.

டாக்டர் மாலிக் மேலும் குறிப்பிடுகையில் 'பாதிரியார் தொலைக்காட்சியில் மன்னரின் இறுதிக் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தபோது, மன்னருடன், வேறு ஒரு சாதாரண மனிதரின் உடலும் அங்கு கொண்டு வரப்பட்டு இருவருக்கும் ஒரே தொழுகை நடத்தப்பட்டு இருவரையும் எந்த வித்தியாசமும் பாராட்டாமல் ஒரே மாதிரியான மண்ணறைகளில் அடக்கம் செய்யப்பட்ட காட்சிகளைக் கண்டார். சமத்துவத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்த இந்த இரண்டு மாறுபட்ட முஸ்லிம்களின் இறுதி அடக்க நிகழ்ச்சிகள் பாதிரியாரின் சிந்தனையைத் தூண்டி அவரை இஸ்லாத்தை ஏற்கும்படி செய்து விட்டன' என்று கூறினார்.

'நான் ஏற்கனவே கடந்த பல வருடங்களாக பல இஸ்லாமிய நூல்களை படித்துள்ளேன். பல ஒலிநாடாக்களை கேட்டுள்ளேன். அவைகள் என்னில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் அரச குடும்பத்தின் இந்த எளிய நல்லடக்கம் என்னை அதிர வைத்து என் மனதை மாற்றி விட்டது.' என்று பாதிரியார் குறிப்பிட்டதாக மாலிக் தெரிவித்தார்.

மேலும் அவர், மன்னரின் இந்த அரிய நிகழ்ச்சி இன்னும் நிறைய மனிதர்களை உளரீதியாக பெரும் மாற்றம் கொள்ள வைத்திருக்கும் என்று தான் நம்புவதாகவும், முஸ்லிம் செய்தி ஊடகங்கள் இஸ்லாத்தின் சகிப்புத்தன்மை மற்றும் சகோதரத்துவம் போன்றவற்றை எடுத்தியம்பக் கூடிய இதுபோன்ற நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துக்காட்டினால் இஸ்லாமிய மார்க்கத்தை அவர்கள் நேசிக்கத் துவங்குவார்கள் என்று ஆலோசனை வழங்கினார்.

62 வயதை அடைந்துவிட்ட இந்த முன்னாள் பாதிரியார் 'எனது மீதமுள்ள வாழ்நாட்களை இந்த அற்புத மார்க்கத்திற்காக பிரச்சாரம் செய்வதிலேயே கழிக்கப் போகிறேன்' என்றும் தெரிவித்தார்.

ஜித்தாவில் உள்ள இஸ்லாமிய கல்வி நிறுவனத்தின் இயக்குனர் பதர் அல்-ஒலயான் கூறுகையில் பாதிரியாரின் இந்த மனமாற்றம் மிக நல்லச் செய்தியாகும் என்று தெரிவித்தார். அதோடு இன்னொரு சம்பவத்தை பற்றிக் கூறும்போது தனது நிறுவன அலுவலகத்திற்கு இஸ்லாத்தில் இணைவதற்காக வந்த ஓர் இத்தாலியர் மக்காவில் லட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் கூடி அணிவகுத்து நின்று தொழுதுவிட்டு அமைதியாக கலைந்துச் செல்வது தன்னை பெரிதும் கவர்ந்த அம்சம் என்று கூறியதாக தெரிவித்தார்.

'ஒரே ஒரு அழைப்பொலி (அதான்) எழுப்புவதின் மூலம் மிகப்பெரும் எண்ணிக்கையிலான மக்களை ஒன்று கூட்டுவது எப்படி உங்களுக்கு சாத்தியப்படுகிறது? நிச்சயம் இது படைத்த இறைவனது செயலே அன்றி வேறில்லை!' என்று அந்த இத்தாலியர் ஆச்சர்யப்பட்டதாகவும் கூறினார். மேலும், முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் இஸ்லாமிய மார்க்கத்தின் நற்செய்திகளை பிற மக்களிடம் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தனது 60வது வயதில் நவம்பர் 15, 2001 அன்று இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட இத்தாலிய தூதர் கார்டில்லி அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது 'இறைவனின் இறுதி வேதமான திருக்குர்ஆனை தொடர்ந்து படித்ததின் காரணமாக இஸ்லாம்தான் சத்திய மார்க்கம் என்பதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டேன்' என்று தெரிவித்திருந்தார். நன்றி: இப்னு பஷீர்
(நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல
ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான் (திருக்குர்ஆன் 2:272)

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

உலகில் – சரியானது என்று நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை பற்றி, 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு, எவ்வித வசதிகளோ, எவ்வித அறிவியல் உண்மைகளும் வெளிவர வாய்ப்புகளே இல்லாத காலகட்டத்தில் அருளப்பட்ட அருள்மறை குர்ஆன் கூறுவதை ஒப்பிடுகிறார் கட்டுரையாசிரியர்.
பேரண்டப் படைப்பின் துவக்கம் -1
நாம் வாழும் இந்தப் பூமியும், அதைச் சூழ்ந்து நிற்கும் ஆகாயமும் அதில் காணப்படும் எண்ணற்ற கோள்களும், துணைக் கோள்களும், நட்சத்திரங்களும் எப்படித் தோன்றின என்ற வியப்பும் வினாவும் மனித உள்ளத்தில் தொன்று தொட்டே அலை பாய்ந்து கொண்டிருந்தன. இதற்கு விடை கூற முற்பட்ட விஞ்ஞானிகள் ஒரு கருதுகோளை (Hypothesis) முன் வைத்தனர். ‘நெபுலா’ என்ற மேகத்திரளிலிருந்து, முதலாவதாக நட்சத்திரங்கள் தோன்றின என்றும், அப்படித் தோன்றிய நட்சத்திரங்களுள் ஒன்றுதான் சூரியன் என்றும் கூறினர். பின்னர் சூரியன் திடீரென வெடித்துச் சிதறிய போது அத்துண்டுகள் கோளமாயின என்றும், அக்கோள்களிலிருந்து துணைக் கோள்கள் பிரிந்து சென்றன என்றும் கூறுகின்றனர்.

இக்கூற்று பரவலாக நம்பப்பட்டு வந்த கால கட்டத்தில் தொடர்ந்து செய்யப்பட்ட ஆய்வுகள் இக்கொள்கைக்கு சாதகமாக அமையவில்லை. கிரகங்களின் பாதைகள், அவை சூரியனை நோக்கிச் சுற்றும் திசை, சூரியனின் அச்சில் சுழற்சி (Axial Rotation) ஆகியவற்றை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தங்களின் முந்தைய கொள்கையை அடியோடு ஒதுக்கிவிட்டுப் புதிய கருதுகோள் ஒன்றை முன்வைத்தனர்.

கோள்கள் சூரியனிலிருந்து வெடித்துச் சிதறியதல்ல: மாறாக அண்டத்தில் உள்ள நட்சத்திரங்கள், கோள்கள், துணைக்கோள்கள் உள்ளிட்ட யாவும் ஒரே சமயத்தில் தோன்றியதாகவே இருக்க முடியும் எனக் கூறி, அண்டம் எப்போதும் உள்ளது: அதற்கு ஆரம்ப முடிவு என்பது இல்லை எனவும் கூறினர்: இக்கூற்று இயல் மாறாக் கொள்கை (Steady State Theory) என்ற கவர்ச்சிகரமான பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.

ஆனால் விஞ்ஞான உண்மைகள் இத்துடன் திருப்திப் பட்டுக் கொள்ளவில்லை. தொடர்ந்து செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள் இக்கொள்கைக்கு பாதகமாக அமைந்து விட்டன. அண்டத்தின் வெப்பச் சூழலைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் இயல் மாறாக் கொள்கையை ஏற்பதற்குத் தேவையான வெப்பத்தை விடக் குறைந்த வெப்பத்தையும், அண்டத்தில் எங்கு பார்த்தாலும் இருண்ட பின்னணியைத் தோற்றுவிக்கும் அளவிற்கு குறைந்த ஒளியையும் கண்டதோடு, ஆண்டொன்றுக்கு 4 க.கி.மீ. (4 Km3) ல் ஒரு ஹைட்ரஜன் அணு உற்பத்தியாவதையும், கண்டனர். எனவே ‘இயல் மாறக் கொள்கை’ கேள்விக் குறியோடு தன்னுடைய வாழ்வை எதிர்நோக்கி நிற்கிறது.

மேற்கூறிய குறைபாடுகள் அனைத்திலும் தப்பி அவைகளையே தனக்குச் சாதகமாக அமைத்துக் கொண்டு மிக்க செல்வாக்குப் பெற்ற கருதுகோளாகத் தற்போது விஞ்ஞானிகளிடம் புகழ் பெற்று வருவது பெரு வெடிப்புக் கொள்கை (Big Bang Theory) யாகும். இக் கொள்கை என்னவெனில், இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பூமி உள்ளிட்ட கோள்களும், துணைக் கோள்களும், நட்சத்திரங்களும், இன்னும் ஏனைய பருப் பொருட்கள் யாவும், ஏறத்தாள பூமியைவிட 318.5 மடங்கு எடை உள்ள வியாழன் (Jupitor) கிரகத்தை ஒத்து, ஆனால் மிக அடர்த்தி வாய்ந்த ஒரு பொருளுக்குள் அடக்கப்பட்டிருந்தது. அப்பொருள் ஏதோ வானியல் காரணத்தால் தூள் தூளாக வெடித்துச் சிதறி அண்டம் முழுவதும் ஒரே தூசுப் படலமாகப் பரவியது. இந்த நிகழ்ச்சி ஏறத்தாள 1800 கோடி வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்தது. இந்த நிகழ்ச்சியின் பிறகு ஒரே புகை மூட்டமாக இருந்த அந்தத் தூசுத் துகள்கள் நட்சத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பருப்பொருட்களையும் தோற்றுவித்தது.

இவ்வாறு பூமி உட்பட இருந்த கோள்களும், ஏனைய துணைக் கோள்கள், நட்சத்திரங்கள் யாவும் ஒன்றாகக் கலந்திருந்த அந்தத் தூசுப்படலத்தில் இருந்து ஏறத்தாள 500 லிருந்து 750 கோடி வருடங்களுக்கிடையில் தனித் தனியாக பிரிந்தன என இந்தப் பெரு வெடிப்புக் கொள்கை (Big Bang Theory) கூறுகிறது.

அண்டத்தின் வரலாற்றை மனிதன் தன்னுடைய நவீன விஞ்ஞான அறிவையும், கருவிகளையும், பொருளாதார வசதியையும், தீராத வேட்கையையும், விடா முயற்சியையும் பயன்படுத்தி கண்டறிந்த இந்த விஷயங்கள் தொடர்பாக, இவ்வாறான வசதிகளோ, வேட்கையோ, இல்லாமல் வெறும் புராணக் கதைகளை பேசி வந்த 14 நூற்றாண்டுக்கு முந்தைய காலக் கட்டத்தில் பரிசுத்த குர்ஆன் என்ன கூறியது எனச் சற்றே திரும்பிப் பார்ப்போம்.

‘நிச்சயமாக வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவற்றை நாமே பிரித்தோம் என்பதையும் (இக்குர்ஆன் என்னுடைய வசனம் அல்ல என்று கூறி) நிராகரிப்பவர்கள் பார்க்கவில்லையா? (அல் – குர்ஆன் அத்தியாயம் 21 ஸுரத்துல் அன்பியா 30வது வசனம்)

என்ன அற்புதமான வார்த்தைகள்!. இவ்வண்டத்தில் இருக்கும் யாவும் இரண்டறக் கலந்து ஒரு புகை மூட்டத்திலிருந்து தான் உற்பத்தியாகித் தனித் தனியே பிரிந்தன என்ற நவீன விஞ்ஞானக் கொள்கையை எவ்வளவு அற்புதமாகக் குர்ஆன் படம் பிடித்துக் காட்டிவிட்டது!.

நவீன விஞ்ஞானத்தின் அபிமான நண்பர்களே! பண்டைக் காலங்களில் உழைக்காமல் சோம்பி, அடிமைப்பட்டிருந்த பாமரனின் உழைப்பையும் சுரண்டி, உண்டு கொழுத்த கொடிய குழுவோரின் கதைகளையும், நாடு துறந்து, வீடு துறந்து, காடு கண்ட மனிதர்களின் கற்பனைக் கனவுகளையும், வேதங்களாய் ஏந்தி வந்த பட்டியலில்.. அறியாமலே.. படித்து உணராமலே.. பத்தோடு பதினொன்றாக உங்களில் சிலர் அருள்மறை குர்ஆனையும் சேர்த்துப் பார்க்கின்றனர். இது அறியாமையல்லவா?. நீங்கள் மெய்யாகவே எதில் அபிமானம் கொள்கிறீர்களோ.. அந்த விஞ்ஞானமே, அருள்மறை குர்ஆன் மெய்யான வேதம் என்பதற்குச் சாட்சியாகி நிற்பதைப் பார்த்தீர்களல்லவா!. பிறகு ஏன் நீங்கள் அதை நிராகரிக்கிறீர்கள்?. நீங்கள் குர்ஆனை ஏற்க மறுத்தால், குறைந்த பட்சம் அதை உலகுக்கு போதிக்க அனுப்பப்பட்ட அண்ணல் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இந்த இருபதாம் நூற்றாண்டில் பிறந்து வளர்ந்தவர் என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.

இப்பூலகின் அறியாமையைப் போக்கிச் சன்மார்க்கம் செழிக்க அண்ட சராசரங்கள் யாவையும் தன் வல்லமை ஒன்றைக் கொண்டே படைத்துப் பரிபாலனம் செய்து கொண்டிருக்கும் இணை, துணையில்லாத அந்த ஏக இறைவனிடமிருந்து அந்த மாநபி முஹம்மத் (ஸல்) பெற்றுத் தந்த பரிசுத்த குர்ஆன் மேலும் கூறுவதைக் கேளுங்கள்.

இவ்வண்டத்தின் படைப்பைத் துவக்குவதற்காக பூமியின் மீது இருக்க வேண்டிய, முளைக்க வேண்டிய அனைத்தையும் நிர்ணயம் செய்த.. ‘பின்னர்.. ஆகாயத்தின் பால் திரும்பினான். அது ஒரு புகையாக இருந்தது..’ (அல்-குர்ஆன் அத்தியாயம் 41 ஸுரத்துல் ஹாமீம் ஸஜ்தாவின் 11வது வசனம்)

இப்போது சொல்லுங்கள்!. நவீன கம்யூட்டர் யுகத்தின் கண்டுபிடிப்புகளை வரிக்குவரி பிறழாமல் 14 நூற்றாண்டுகளுக்கு முந்திய சூழ்நிலையில் ஒரு மனிதரால் கூறியிருக்க முடியுமா?. ஆனால் அப்படி கூறியிருக்கிறார் என்பது தற்போது உலகறிந்த உண்மை. இதிலிருந்து நீங்கள் எந்த முடிவுக்கு வர விரும்புகிறீர்கள்?. நாம் முன்னரே கண்டது போல் திரு நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் இருபதாம் நூற்றாண்டு மனிதரென்றா?. அல்லது அவர் போதித்த இந்த அற்புதமான உண்மைகளைக் கொண்ட பரிசுத்த குர்ஆன் அண்ட சராசரங்களையும் படைத்த மெய்யான இறைவனின் வேதமென்றா?.

நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் இதில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும். எல்லாம் வல்லவனும், பேரருளாளனும், இப்பரிசுத்த குர்ஆனின் ஆசிரியனும் யாரோ அவன் நம் அனைவருக்கும் நல்ல முடிவை – சரியான முடிவைத் தேர்வு செய்யத் துணை புரிவானாக!
(வளரும் இன்ஷா அல்லாஹ்)

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

பறக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா?
M.S.Rahmathullah

படைப்பினங்களில் வியப்பிற்குரியது பறவைகளாகும். மனிதர்கள் யாரும் இதைப்பற்றி சிந்திப்பதில்லை. ஆனால் இந்த உலகத்தையும் அதிலுள்ள படைப்பினங்களையும் படைத்து பரிபாலித்துவரும் நம் இறைவன், இதைப்பற்றி சிந்தித்து, படைப்பாளனான அந்த ஓர் இறைவனை மட்டுமே மனிதர்கள் வனங்கவேண்டும் என்பதர்க்காக மனிதர்களின் பொதுமறையான திருக்குர்ஆனில் பல உதாரனங்களை கூறுகின்றான். அதில் ஒன்று பறவைகளாகும். இதைப்பற்றி திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்...

வானத்தின் (காற்று) வெளியில் கட்டுப்பட்டு பறக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (ஆகாயத்தில்) தாங்கி நிற்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை. நிச்சயமாக இதில் நம்பிக்கைக்கொண்ட மக்களுக்கு (த்தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன. (திருக்குர்ஆன் 16:79 )

இறக்கைகளை விரித்துக் கொண்டும், சேர்த்துக் கொண்டும், இவர்களுக்கு மேல் (வானில் பறக்கும்) பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அர்ரஹ்மானைத் தவிர (வேறு யாரும் கீழே விழாது) அவற்றைத் தடுத்துக் கொண்டிருக்கவில்லை - நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் நோட்டமிடுபவன்.(திருக்குர்ஆன் 67:19 )

இப்போது பறவையைப்பற்றி சில தகவல்களை அறிந்துகொள்வோம்...
'இறக்கைகள் கொண்ட இருகாலி'யைப் பறவை எனக் கூறுவர். பறவைகள் முதுகெலும்புடைய இளஞ்சூட்டுக் குருதியுடைய விலங்குகளை குறிக்கும். பறவைகள் இருகால்கள் உள்ள, தன் உடல்வெப்பம் காக்கும், முதுகெலும்புள்ள (முள்ளந்தண்டுள்ள) புள் என்றும் குரீஇ என்றும் சிறப்பித்துக் கூறும் வகையைச் சேர்ந்த, முட்டையிடும் விலங்குகள் ஆகும். முன்னங்கால்கள் அல்லது கைகள் போல் முன் உறுப்புகளாய் இறகுகளால் ஆன சிறகுகள் இருத்தலும், பறப்பதற்குத் துணையாக காற்றறைகள் கொண்ட இலேசான, பொள் எலும்புகள் கொண்டிருப்பதும் பறவைகளின் தனிச் சிறப்பியல்புகள் ஆகும். விலங்குகளிலேயே இறகுகள் உள்ள ஒரே வகுப்பு பறவைகள்தான். விலங்குகளில் பறவை என்னும் வகுப்பில் மொத்தம் 9672 பறவையினங்கள் உள்ளன என்று பறவையியல் அறிஞர்கள் கணித்து குறிப்புகள் எழுதியுள்ளார்கள்.

பறவைகளில் மணிக்கு 160 கி.மீ விரைவில் பறக்கும் இனமும் உண்டு. நிலம், நீர் வானம் இவற்றில் விரைந்து நகரக்கூடிய விலங்கினங்கள் யாவற்றினும் மிக விரைந்து செல்லக்கூடியது பறவையினத்தைச் சேர்ந்த பொரி லகுடு (அ) அலையும் வல்லூறு(Falco peregrinus) என்னும் பறவையே. சில பறவைகள் நெடுந்தொலைவு ( 17,000 கி.மீ வரை) செல்லவல்லது. பறவைகள் முதுகெலும்புள்ளவை. பாலூட்டிகளைப் (Mammals) போல நான்கு அறை இதயத்தையும் வெதுவெதுப்பான இரத்தத்தையும் கொண்டவை. இதன் காரணமாக சீரான தன் உடல் வெப்பத்தையும், வேறுபட்ட சூழ்நிலைகளில் வாழும் தன்மையும் பெறுகின்றன.
சிறகுகள்
பறவைகளின் சிறகுகளில் உள்ள முக்கிய பொருள் 'கெரோட்டின்'. நமது தலைமுடி, விரல் நகம் அகியவற்றில் உள்ள அதே கெரோட்டின், ஆனால் நமது தலைமுடி, நகங்களைப் போல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே போகாமல் ஓர் அளவுடன் நின்று விடும். இதனால் பெரும்பாலும் வளர்ந்த பறவைகள் வருடம் ஒரு முறையாவது சிறகுகளை உதிர்த்து புதுப்பித்துக் கொள்ளும். இந்த சிறகுகள் எடை குறைவான ஆனால் வலுவான பறப்பதற்கேற்ற 'ஏரோடைனமிக்' மேற்பரப்பை பறவைகளுக்கு அளிக்கிறது. பறக்கும் போது சிறகுகள் இடையே சிறு சிறு காற்று பொட்டலங்கள் ஏற்பட்டு மிக வெப்பம், குளிர் அகியவற்றிலிருந்து பறவைகளைக் காக்கிறது.

கண்கள்
பறவைகள் பெரும்பாலும் கூரிய பார்வை உடையது. ஒரு கண்ணுக்கு மூன்று இமைகள் இருக்கும். மேல் இமை மனிதர்களின் கண் இமையைப் போன்றது. கீழ் இமை தூங்கும் போது மட்டும் மூடிக் கொள்ளும். இது தவிர பக்கவாட்டில் அலகின் அருகிலிருந்து துவங்கும் ஒரு மெலிதான தோல் உண்டு. இது ஒளி ஊடுருவக்கூடிய தோல், கண்களை ஈரப்படுத்தவும், காற்று, அதிக வெளிச்சத்திலிருந்து காக்கவும் உதவுகிறது.

காது
பறவைக்கு காது மிக முக்கியமானது. ஆனால் முழுவதும் உள்புறமாகவே அமைந்துள்ளது. கண்ணுக்குச் சற்று கீழே சிறிய துளை இருக்கும். பெரும்பாலும் சிறிய இறகுகளால் மூடப்பட்டிருக்கும். பறவைகளுக்கு காது ஒலியைக் கேட்பதற்காக மட்டுமல்லாமல் பறக்கும் போது ஈடான உடல் நிலைக்காகவும் தேவைப்படுகிறது.

மூளை
பறவைகளின் மூளை பலவிதங்களில் முழுமை பெற்றது. பறக்கும் போது விமானத்தைப் போல உடலில் அனைத்து இயக்கங்களின் ஒருங்கிணைப்பு, உள்ளுணர்வு, உடனடியாக உணர்ந்து கொண்டு திசை மாறுதல் போன்றவற்றை செயல்படுத்துகிறது. பறவைகளின் அறிவுத் திறனும் வியப்பூட்டுமாறு சிறப்பாக உள்ளது. மனித மூளையில் உள்ள சிந்திக்கும் பகுதியான 'செரிபெரல் கார்டெக்ஸ்' (Cereberal Cortex) பறவைகளில் மிகப் பின்னடைந்த நிலையிலேயே உள்ளது. ஆனால் ஹைபர்ஸ்ட்ரியாடம் (Hyperstriatum) என்னும் மனிதர்கள் மற்றும் பிற பாலூட்டிகளில் இல்லாத ஒரு பகுதி பறவைகளில் மூளையில் உள்ளது. இந்த பகுதியே பாடும் பறவைகள் பாட்டுக்களைக் கற்றுக் கொள்ள உதவுகிறது. பறவைகளின் அறிவுத்திறனுக்கும் இதுவே காரணமாக இருக்கலாமென்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.

பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை. (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை. இன்னும் இவை யாவும் இவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும். .(திருக்குர்ஆன் 6:38 )

(நபியே!) நீர் பார்க்கவில்லையா? வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்துப் பறந்த வண்ணமாக அல்லாஹ்வை நிச்சயமாக துதிசெய்கின்றன. ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், துதிசெய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது - அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான்.(திருக்குர்ஆன் 24:41)

(அல்லாஹ்)அவன் எத்தகையவன் என்றால்.. அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்.(திருக்குர்ஆன் 2:29)

இன்னும் உங்களைப் படைத்திருப்பதிலும், அவன் உயிர்ப் பிராணிகளைப் பரப்பியிருப்பதிலும் (நம்பிக்கையில்) உறுதியுள்ள சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.. (திருக்குர்ஆன் 45:4)
தகவல்கள் விக்கிபீடியாவில் இருந்து.

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

படைப்புகளை ஆராய்வோம் படைத்தவனை அறிவோம்
தேங்கை முனீப்
விரிந்து பரந்த இப்பிரபஞ்சமெனும் புத்தகத்தின் எந்தப் பக்கத்திலும் அதை உருவாக்கியவனின் பெயர் எழுதி வைக்கப் படவில்லை ஆனால் பிரபஞ்ச புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்தும் இதனைப் படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் என்பதைப் பறைசாற்றுகின்றன அப்படைப்பாளனின் வல்லமைகள் குணநலன்கள் குறித்த தேவையான விபரங்களை அப்புத்தகத்தின் வாக்கியங்கள் நமக்குக் கற்றுத் தருகின்றன
சிந்திக்கும் திறன் உள்ளவனே மனிதன் அண்டப் பெருவெளியின் மையத்தில் நிற்கும் அவனிடம் இயற்கையாகவே சில கேள்விகள் எழுகின்றன அக்கேள்விகள் அனைத்தும் அவனையும் அவனைச் சூழ்ந்திருக்கும் இப் பெருவெளியைக் குறித்தும் அறிய விரும்பும் அவனது ஆவலை வெளிப்படுத்துவதாகும் அறியாப் பாமரன் முதல் அறிவியலாளன் வரை அனைவரது உள்ளத்திலும் இக்கேள்விகள் எழுகின்றன மனிதனுக்கு எப்போது அறிவும் சிந்தனையும் வழங்கப்பட்டதோ அன்று முதல் அவன் இக்கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கின்றான் நாகரீக வளர்ச்சியின்
படித்தரங்களை ஆராய்ந்தால் இதுவே நமக்குப் புலப்படுகிறது
மனிதனால் முன்வைக்கப்படும் கேள்விகளில் முதன்மையானது இப்பேரண்டத்தை உருவாக்கியவன் யார்? என்பதாகும் சிகரங்களின் உச்சியிலோ கடலின் அடியிலோ ஆகாயத்தின் வெளியிலோ அவற்றை உருவாக்கியவனின் பெயர் எழுதப்படவில்லை ஆனால் மலைகள் கடல்கள் ஆகாய வெளி காற்று நீர் என ஒழுங்காகப் படைக்கப்பட்டிருக்கும் பெருவெளியின் ஒவ்வொரு அங்கமும் இதற்குப்பின்னால் வல்லமை மிக்க ஒரு படைப்பாளன் இருக்கின்றான் என்பதற்கு அமைதியான சாட்சிகளாக இருக்கின்றன

மனிதப் படைப்பை ஓர் உதாரணமாகக் கொள்வோம் தந்தையால் வெளிப்படுத்தப்படும் இலட்சக்கணக்கான விந்தணுக்களில் ஒன்றே ஒன்று மட்டும் தாயின் கருவறையில் சினை முட்டையுடன் இணைந்து ஒரு கருவாகிறது ஆரம்ப நிலையிலிருக்கும் இக் கருவுக்கு தான் பிறந்து செல்லவிருக்கும் வெப்பம் குளிர் காற்று ஒளி ஒலி எல்லாம் உள்ள உலகத்தைக் குறித்த எந்த அறிவும் இருப்பதில்லை ஆனால் இவற்றை எல்லாம் அறிந்து கொள்ள உதவும் திசுக்களாக சுயமாகவே பெருக்கமடைகிறது ஒன்றாக இருந்தது சுயமாகவே பலகோடி திசுக்களாகப் பெருக்கமடைகின்றன இதயம் நுரையீரல் இரைப்பை முதலான உடலின் உள்ளுறுப்புகள் உருவாகின்றன
எல்லாவற்றுக்கும் மேலாக இவற்றையெல்லாம் நிர்வகிக்கின்ற மிகப்பெரிய அற்புதமாகிய மூளை உருவாகின்றது எவ்வாறு இது நடை பெறுகிறது? அற்பமான புறக்கண்ணால் பார்க்க இயலாத வேறுபட்டிருந்த இரு அணுக்களை ஒன்றிணையச் செய்து இவ்வளவு அற்புதச் செயல்களை நடைபெறச் செய்பவன் யார்? இவற்றக்குப் பின்னால் உள்ள ஒரு படைப்பாளனை ஏற்றுக் கொள்வதன்றோ அறிவுடைமை? சிந்தனை செய்து இறைவனைப் பற்றி அறிந்து கொள்ள குர்ஆன் அழைக்கிறது படைப்புகளைப் பற்றிய சிந்தனையின் மூலம் படைத்தவனின் உள்ளமையை அறிந்து கொள்ளுங்கள் என்ற அறிவுப்பூர்வமான கோட்பாடைத் திருக்குர்ஆன் கூறுகிறது
ஒட்டகத்தை அது எவ்வாறு படைக்கப் பட்டுள்ளது என அவர்கள் (கவனித்துப்) பார்க்க வேண்டாமா? வானத்தை அது எவ்வாறு உயர்த்தப் பட்டுள்ளதென்றும் மலைகள் அவை எவ்வாறு நடப்பட்டுள் ளனவென்றும் பூமி அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ள தென்றும் (அவர்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?) (அல்குர்ஆன் 88- 17-20)
பரந்து வியாபித்திருக்கும் பேரண்டப் பெருவெளியின் அழகிய படைப்பைக் குறித்து ஆராய்வதன் மூலம் இதற்குப் பின்னாலிருக்கும் மாபெரும் படைப்பாளனின் அதியற்புத சக்தியை விளங்கிக் கொள்ள இயலும் கற்பனைக் கதைகளுடனும் புரியாத தத்துவங்களுடனும் கடவுளைக் கற்பித்த புராதன கால கட்டத்திலேயே இஸ்லாம் இம்மா பெரும் பிரபஞ்ச நாதனின் வல்லமைகளைக் குறித்த அறிவுப் பூர்வமான விளக்கங்களை அளித்தது கண்ணை மூடிக் கொண்டு கடவுளை நம்ப வேண்டும் என்பதை விட படைத்தவனைக் குறித்து அறிந்து நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தை இஸ்லாம் கற்றுத் தருகிறது இறை கொள்கையில் இஸ்லாம் நமக்குக் கற்றுத் தரும் இத்தகைய உயர்ந்த கொள்கை இன்று நடைமுறையில் உள்ள எந்த மதத்திலும் கிடையாது என்பது இஸ்லாமினுடைய தனிச்சிறப்புகளில் ஒன்றாகும்
தன்னைப் பற்றியும் தன்னைச் சூழ்ந்துள்ள பிரபஞ்சத்தைக் குறித்தும் ஆராய்வதன் மூலம் இதற்குப் பின்னாலிருக்கும் அந்த இறைவனின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளுமாறு மனிதனுக்கு அழைப்பு விடுக்கும் குர்ஆனிய வசனங்கள் பாமரர் முதல் விஞ்ஞானிகள் வரை புரிந்து கொள்ளக் கூடிய அளவில் தெளிவாகவும் எளிதாகவும் உள்ளது நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முதன் முதலில் அருளப்பட்ட வசனங்களைப் பாருங்கள்

(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக அலக் என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான் ஓதுவீராக உம் இறைவன் மாபெரும் கொடையாளி அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான் (96. 1 -4)
மேற்கண்ட வசனங்கள் மனிதனின் சிந்தனை உணர்வைத் தட்டியெழுப்பக் கூடியதாக உள்ளன
இவ்வுலகில் மனிதனாகப் பிறப்பதற்கு முன் நம் நிலை எவ்வாறிருந்தது? நம் தந்தையின் உடலில் உள்ள கோடிக்கணக்கான விந்தணுவில் ஒரு அணுவாக தாயின் சினைப்பையில் உள்ள கருமுட்டைகளில் ஒரு முட்டையாக வேறுபட்டுக் கிடந்த ஓர் ஆன்மா பின்னர் விந்தணுவும் சினை முட்டையும் இணைந்த ஒரு கருவாக பின்னர் முதிர்ச்சியடைந்த தசைப் பிண்டமாக பின்னர் அதில் எலும்புகளும் மஜ்ஜைகளும் ஊருவாகி கண் காது மூக்கு கை கால் என எல்லா உறுப்புகளும் உருவாகி ஒரு முழு மனிதனாகப் பிறந்து வருகிறோம்
இவ்வுலகில் உள்ள கோடிக்கணக்கான மனிதர்களுள் ஒரு மனிதனாக நாமும் வாழ்கிறோம் நம்முடைய உடலில் பல்வேறு செயல்பாடுகள் எலும்பு மண்டலம் நரம்பு மண்டலம் சுவாச உறுப்புகள் ஜீரண உறுப்புகள் நோய் எதிர்ப்பு என வியக்கத் தக்க செயல்பாடுகள் நடை பெறுகின்றன இன்னின்னவாறு செயல்படுங்கள் என்று நாம் அவ்வுறுப்புகளுக்குக் கட்டளையிடுவதில்லை நாம் சாப்பிடுகிறோம் ஜீரணமாகிறது உடலுக்குத் தேவையான சக்திகளை உணவிலிருந்து தயாரிக்க உறுப்புகள் கழிவை வெளியேற்ற இரத்தத்தைச் சுத்தீகரிக்க சிந்திக்க செயல்பட எழுத பேச என அனைத்தும் உடல் உறுப்புகளின் ஒன்றோடொன்று ஒத்துழைக்கும் வியத்தகு செயல்பாடுகள் யாருடைய செயல்பாடு இதற்குப் பின்னால் உள்ளன?
கண்ணுக்குத் தெரியாத கற்பனை செய்ய முடியாத இரு வேறு கூறுகளாகப் பிரிந்து கிடந்த விந்தணுவையும் சினை முட்டையையும் இணைத்து நம்மைப் படிப்படியாக வளரச் செய்து முழு மனிதனாக்கிய அவ்விறைவனின் அதியற்புத ஏற்பாடு இது இவ்வாறு படைத்த இறைவனே நம்மைப் படைத்த விதத்தை எடுத்துக்கூறி நம்மை சிந்திக்கச் சொல்கிறான அறியாத பாமரன் முதல் அறிவியலாளன் வரை இத்தகைய சிந்தனையால் தன் இறைவனைப் பற்றி அறிய உதவும் எளிய கோட்பாடை குர்ஆன் கற்றுத் தருகிறது இதோ வல்லமை மிக்கவனாகிய அந்த இறைவன் குர்ஆனில் மக்களைப் பார்த்துக் கேட்கின்றான்

நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான் பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான் மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான் இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள் (2-28)

நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம் பின்னர் நாம் அவனை ஒரு பாதுகாப்பன இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம் பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம் பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம் பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம் பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம் பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம் (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன் (23-12-14) (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா? (56- 58- 59)
இவ்வாறான வசனங்கள் நம்மைப் படைத்தவனை நோக்கிய சிந்தனையின் பால் இட்டுச் செல்கிறது அவ்விறைவனின் மகா வல்லமையை விளங்கிக் கொள்வதன் மூலம் மட்டுமே மனிதனின் ஆன்மீக லௌகீக வாழ்வுகள் சீரடைகின்றன இறை சிந்தனையைப் பற்றிய இன்னும் சில விபரங்களை அடுத்த பதிவில் காண்போம்
இன்ஷா அல்லாஹ்