செவ்வாய், 20 ஜூலை, 2010


இஸ்லாம் மானுடத்தை ஒரே உலகிற்கு அழைக்கம் ஒளிவிளக்கு!

சமூக இயல் ஆய்வாளர் வலம்புரிஜான்
இஸ்லாம் - ஒரு நாடு கடந்து வந்த நதி:
நதி ஒரு நாட்டிற்குள்ளேயே வளைய வருவதைவிட நாடு கடந்து, செல்லுகிற இடத்திற்கெல்லாம் செழிப்பைத் தருவதுதான் சிறப்பு.இஸ்லாம் அந்த நாளில் அரபு மக்களுக்கு மத்தியில் இறக்கப்பட்டதாக இருந்தாலும், இந்த நாளிலும் உலகம் எங்கிலும் உள்ள மக்களை நல்வழிப் படுத்துவதற்கான சத்திய ஆவேசம் அதில் தகித்துக் கொண்டிருக்கிறது. இஸ்லாமியச் செய்தி குறிப்பிட்ட வகுப்பாருக்கு உரியதில்லை. இஸ்லாமியச் செய்தி உலகம் முழுவதற்கும் உரியது. காரணம் இறைவன் 'ஆதமின் மக்களே!' என்று அழைத்து அந்தச் செய்தியைப் பொதுமைப் படுத்துகிறான். இஸ்லாத்தில் வருகிற அல்லாஹ், ஆண்டவனுக்கான அரபுப் பெயரே தவிர, அவன் அரேபியர்களின் ஆண்டவன் மாத்திரம் அல்லன்.

அவன் எல்லா உலகங்களின் இறைவன் (திருகுர்ஆன் 1:1)நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் மனித குலம் அனைத்திற்கான இறைத்தூதர் ஆவார்.ஓ மக்களே! நான் உங்கள் எல்லோருக்குமான இறைத்தூதன்: (திருக்குர்ஆன் 8:158)சகல நாடுகளுக்குமான அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர் (திருகுர்ஆன் 25:1)எல்லா நாடுகளுக்கும் உம்மை இரக்கத்தின்படியே அனுப்பியிருக்கிறோம். (திருகுர்ஆன் 21:102)

இஸ்லாத்தைப் போல பிற எந்தச் சமயமும் உலக சகோதரத்துவத்தை வற்புறுத்தவில்லை. இஸ்லாம் ஒரு குறுகிய பிரிவினைச் சபை அல்ல. இது இஸ்லாத்தின் உள்ளொளியும், ஆற்றல் களமும் ஆகும், இஸ்லாம் மனித குலத்தின் மனச்சாட்சிக்கு ஒட்டுமொத்தமாக அறைகூவல் விடுக்கிறது. எல்லாப் படைப்புகளும் இறைவனைச் சார்ந்தவையே, அவனது படைப்புகளைச் சிறப்பாக நேசிக்கிறவனே, அவனால் அதிகமாக அன்பு செய்யப்படுகிறவன் ஆவான் என்கிறார். இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்)
மேலும் அவரே குறிப்பிட்டதாவது: ~என் அருமை எஜமானே! என் உயிரின் மற்றும் எனது எல்லாவற்றிற்குமான கர்த்தாவே! உலகத்தில் உள்ளோர் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்களே என்று உறுதி கூறுகிறேன்.

கடவுளின் வழிகளைக் கனம் பண்ணுங்கள், கடவுளுக்குச் சொந்தமான உலகப் படைப்பினிடம் அன்பு பாராட்டுங்கள். ஆகவே செயற்கைப் பிரிவுகளால் உருவாகிற வேறுபாடுகள், தடைகள் ஆகியவற்றை இஸ்லாம் ஏற்பது இல்லை.இஸ்லாம் அரேபியர்களுக்காக இறக்கப் பட்டதைப்போல் தோற்றமளிக்கிறது. ஆனால் உலகத்திற்காக, அனைத்து மக்களுக்குமாக அது இறக்கப்பட்டது என்பதை ஏற்காமலிருந்தால் அது மனித குலத்திற்கு தான் மாபெரும் இழப்பாகிப் போகும்.

இஸ்லாம், சர்வதேச வாழ்க்கை முறையை எவ்வாறு அங்கீகரிக்கிறது, என்று பார்ப்பது நலம். ஒரு இஸ்லாமிய குடியரசிற்கும் அல்லது அரசாங்கத்திற்கும் மற்ற நாடுகளுக்குமான உறவு முறைகளை இது குறித்துக் காட்டுகிறது. இம்மாதிரியான உறவுமுறைகளும் இறைவனின் கட்டளைப்படியே அமைந்திடல் வேண்டும். இதற்கான அடிப்படைகளை இப்போது பார்க்கலாம்.
மனிதத் தொடக்கம், மனிதனின் நிலை, அவனது சமுதாய நோக்கம். ஆகியவற்றில் உள்ள ஒரே மனித சமுதாய உணர்வின் மீது அசைவற்ற நம்பிக்கை வைத்திருப்பது (திருகுர்ஆன் 4:1, 7:189, 49:13)

மற்றவர்களாக ஆக்கிரமிப்பில் ஈடுபடாத வரை அவர்களது உயிர், உடமை, உரிமைகளுக்கு பாதுகாப்புத் தருவதில் உறுதியாக நிற்பது. (திருகுர்ஆன் 2:190-193,42:42)

நாடுகளுக்கு இடையிலான நல்லெண்ணத் தின் அடிப்படையில் சமாதானத்தை உறவு முறைகளில் கடைபிடித்தல். (திருகுர்ஆன் 8:61)

இஸ்லாமிய அரசாங்கத்தின் இறையாண்மைக்குச் சவால் விடுத்து, அதன் உரிமைகளைக் காலில் இட்டு மற்ற நாடுகள் மிதிக்கிறபோது, வேறு வழிகள் பயன் தராவிட்டால் தற்காப்பிற்காகப் போரிடலாம். (திருகுர்ஆன்; 2:190-195,216,218, 22:39-41)

மற்ற நாடுகள் பிரமாணிக்கமாக இருக்கிறவரை அந்த நாடுகள் செய்து கொண்ட உடன்படிக்கைகளை மதித்தல்-நிறைவேற்றுதல். (திருகுர்ஆன் 5:1, 8:55-56,58, 9:3-4)

உள்நாட்டில் அமைதியைக் கட்டிக் காத்து, மக்கள் நலத்தை மேம்படுத்துவது மாத்திரம் போதாது: ஒவ்வொரு இஸ்லாமிய அரசும், மனித குலத்தின் ஒட்டுமொத்தமான, பொதுவான முன்னேற்றத்திற்காகப் பாடுபட வேண்டும். இதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களே வற்புறுத்தி வந்தார்கள். ஆகவே, உலக நலத்திற்காகச் சில சமயங்கள் பிரார்த்திப்பதோடு நின்று விடுகிற நாட்களில், மனித குல ஈடேற்றத்திற்காக முன்நிற்பதை, உழைப்பதை இஸ்லாம் கடமையாக்கி இருக்கிறது. ஆகவேதான் இஸ்லாத்தை நாடு கடந்து வந்த நதி என்று அழைக்கலானேன்.

இஸ்லாம்;; ஒரே உலகத்திற்கு நம்மை அழைக்கிற ஒளிவிளக்கு...உலகத்தின் பல்வேறு சின்னதும் பெரிதுமான பிரசங்கத் தொட்டிகளிலிருந்து ஒரே மாதிரி எடுத்துச் சொல்லப்படுகிற தத்துவார்த்தம் ஒன்று உண்டென்றால் அது ஒரே உலகம் தான்.

உலகம் ஒன்றாக இல்லை என்பதற்குக் காரணம், உலகத்தின் அடிப்படை அழகான மனிதனும் ஒன்றானவன் இல்லை என்பதுதான். அடையாளம் காண்பதற்காகவே மனிதன் வெவ்வேறாகப் படைக்கப்பட்டான். இப்படித்தான் திருகுர்ஆன் குறிப்பிடுகிறது. ஆனால் உலகம், மதம், மொழி, இனம், நாடு என்கிற அடித்தளத்தில் பிரிந்தும், பிளந்தும் கிடக்கிறது.

ஒருவரிடமிருந்து, மற்றொருவர் எதற்காக வேறுமாதிரி படைக்கப்பட்டாரோ அந்த அடிப்படை அவசியத்தையே மனிதகுலம் தாறு மாறாக்கி விட்டது. தாமஸ் மூரிலிருந்து, ஹெச்.ஜி. வெல்ஸ் வரை-அவருக்குப் பிற்பாடும் ஒரே உலகம் கனவுலக சஞ்சாரமாகவே அமைந்துள்ளது.இப்போது பல்வேறு நாடுகளின் அரசுப் பிரதிநிதிகளின் இரவு உணவுக்குப் பின்னரான மயக்கம் கலந்த பேச்சுகளில் மாத்திரமே இந்த ஒரே உலகம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

அமைதி, முன்னேற்றம், செழிப்பு ஆகியவை வழிநடத்தும், புதிய ஒரே உலகத்திற்கான அறைகூவலை இஸ்லாம் முன்வைக்கிறது. இஸ்லாம் ஒன்றுதான் அந்த ஒரே உலகத்திற்கான வழி என்பதாகத் தோன்றுகிறது. உலகின் ஒருமை என்பது சில சமுதாயங்கள் ஒன்று சேர்ந்து விடுவது அன்று. சில நாடுகள் ஒரு தலைப்படுவதும் அன்று. இவ்வாறான ஏற்பாடு செய்யப்படுகிற அமைதி, கடந்த காலத்தில் உலக அமைதிக்கே குந்தகம் உண்டாக்கியிருக்கிறது. வரலாற்றில் இதற்கு நிரம்ப உதாரணங்கள் உண்டு. ஒருவர் மற்றொருவரைத் தனிப்பட்ட காரணங்களுக்காகக் கொன்றால் அது தண்டனைக்குரிய குற்றம் என்றாகி விடுகிறது.

ஆனால் ஒரு நாடு மற்றொரு நாட்டைக் கொல்லுகிறபோது, அதன் ஆத்மாவை நெறித்து அழிக்கிறபோது, வெற்றி பெறுகிறவர்களும், தோற்றுப்போகிறவர்களும் தங்களுக்காகப் போரிட்டவர்கள், படுகொலைகளில் ஈடுபட்டவர்களைப் பாராட்டி மகிழுகிறார்கள்.ஆகவேதான் சில வேளைகளில் ஒரு நாடு கரை கடந்த தேசப்பற்றால் எரிகிறபோது அது ஒரே உலகம் என்கிற தத்துவத்தற்கு எதிராக போகிறது.

தேசப்பற்று அவசியமே. அது அடுத்த நாட்டை வெறுப்பதாக இருத்தல் ஆகாது. நாடு, நாமே ஏற்றுக்கொண்ட ஏற்பாடுதானே! இதில் அடுத்த நாட்டை வெறுப்பதற்கு எங்கே இடமிருக்கிறது? இவ்வளவு முயன்றும் ஒரு நாட்டை ஏன் நம்மால் ஒற்றுமைப்படுத்த முடியவில்லை? எந்த அடிப்படைகளில் நாட்டு மக்களை ஒன்று சேர்க்க முயலுகிறோமோ, அந்த அடிப்படைகளே தவறானவையாக இருக்கின்றன. இன அடிப்படையில் தனது மக்களை ஒன்று சேர்க்க ஒருவர் முயலுகின்றார். சமயப் பிரிவினைகள் தலைதூக்குகிறபோது, இன ஒற்றுமை எடுபடாமல் போகிறது.

மற்றொருவர் சமய அடிப்படையில் தமது மக்களை ஒன்று திரட்ட முனைகின்றார். இனப் பிரிவுகள் தலைகாட்டி இந்த முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிகின்றன. தேசீயம் என்கிற அடிப்படையில் வேறொருவர் மக்களை ஒன்று திரட்ட முற்படுகிறார். ஆனால், பல்வேறு மொழிகள், மொழி உணர்வுகள், அதனதன் வரலாறுகள், செழுமைகள், பாரம்பரியங்கள் தேசீய அடிப்படையில் சேர இயலாமல் இந்த முயற்சியை அழித்து விடுகின்றன. காரணம் மொழிதான் மனிதனின் கடைசியான மானச் சின்னம். அந்த மொழியை அவமானப் படுத்திவிட்டு, நாட்டொருமை பேசுவது வீண்வேலை.

ஒருவர் மொழி அடிப்படையில் அம்மொழி பேசுவோரை ஒன்றிணைக்க முயலுகின்றார். அதிலும் அவர் தோல்வியே பெறுகின்றார். காரணம் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், பணம் படைத்தோர் என்கிற பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தலைகாட்டி விடுகின்றன. நீங்கள் ஒன்றாக்க நினைக்கிற மனிதத் தொகுதி மண்புழுவைப் போல பிரிந்து கொண்டே போகிறது! ஏன்?
மனிதர்களைப் பிரிக்கிற, பேதப்படுத்துகிற அடிப்படை அலகுகளை வைத்துக் கொண்டு அவர்களை ஒன்று சேர்க்கிற மடத்தனத்தில் இவர்கள் இறங்குகிறார்கள், இம்மாதிரியான தவறான முயற்சிகளுக்கும் வரலாற்றில் வெற்றி வந்ததுண்டு. ஆனால் அந்த வெற்றி நீடித்ததாகவோ, நிலைத்ததாகவோ இருந்ததில்லை.

முதலாவதாக நம்மில் ஒவ்வொருவரும் பிரபஞ்சத்தில் ஒரு மகத்தான மகரந்தம் மாத்திரமே என்பதை உணர வேண்டும். வானத்தை, அதில் இயங்கும் பல்வேறு கோளங்களை, தாளகதி தப்பாமல் இயங்கும் உடுக்களை, இரு சுடர்களை எண்ணிப் பார்த்தால் இயற்கையில் ஒரு ஒழுங்கு இருப்பது புலப்படும்.

காஸ்மாஸ் (cosmos) என்கிற வார்த்தைக்கே ஒழுங்கு என்பதுதான் அடிப்படைப் பொருள். பஞ்சபூதங்களும் ஏவல் செய்கிற பேராண்மை நம்மை வியக்க வைக்கிறது. இவற்றையெல்லாம் இயக்குவோன் யார்? எந்தப் பெயராலும் அவனை அழைத்துக் கொள்ளுங்கள்.அவன் இறைவன் அல்லவா? அந்த இறைவன் நாட்டுக்கொரு கதிரவனைப் படைத்தானா? நதிகள் ஏன் நாடுகளைக் கடந்து, ஊடறுத்துப் பாய்கின்றன.?

மழைத்துளிகளில் இது இந்த நாட்டைச் சார்ந்தது- அது அந்த நாட்டைச் சார்ந்தது என்று எங்காவது முத்திரை குத்தப்பட்டிருக்கிறதா? ஒருவர், சுவாசித்துவிட்ட காற்றையல்லவா நாம் சுவாசிக்கிறோம்: நமது காற்றை வேறொருவர் சுவாசிக்கிறார்.

காற்றுக்கு மொழி உண்டா?இனம் உண்டா?சாதி உண்டா?நாடு உண்டா?நேற்று, இன்று, நாளை என்கிற காலப் பிரிவினை உண்டா?நாம் சுவாசிக்கிற காற்றில் இது இந்தியக் காற்று - இது பாகிஸ்தான் காற்று என்று எங்காவது முத்திரை குத்தப்பட்டிருக்கிறதா? பிறகு ஏன் பிரிவினைகள்? பேதங்கள்? இறைவன் ஒரே உலகத்தைத்தானே படைத்தான். இதில் ஏன் இத்தனை பிளவுகள்? மனிதனே இந்தச் செயற்கையான பிரிவினைகளுக்கெல்லாம் காரணம். இவ்வாறு பிரிவது, பிரிப்பது மனிதனின் மாற்றமுடியாத இயற்கை. அவன் தன்னைத் திருத்திக் கொள்ள இயலுமா? இயலும்: மனிதன் தனது ஆறாவது அறிவை முழுக்கப் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் நாம் அனைவரும் ஒரே இறைவனின் படைப்பு(அடிமை)கள் என்பதை அவன் அறிய இயலும். அவன் படைத்த ஒரே உலகத்தைச் செயற்கைச் சுவர்களால் மனிதன் பிரித்துப் பேதப்படுத்திப் பின்னப்படுத்தலாமா?

இறைவனின் வழிகாட்டுதலைப் பற்றியே இஸ்லாம் மீண்டும் மீண்டும் பேசுகிறது. இறைவனின் வழிகாட்டுதல் எங்கே இருக்கிறது? திருகுர்ஆனில் கண்கள் படைத்தோருக்கெல்லாம் காணக்கிடக்கிறது. அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே - முஸ்லிம்கள் பிரகடனப்படுத்துகிறார்கள்.
நமது புகழ் மொழிகள் எந்த அளவிற்கு மனிதர்களை நோக்கி மையம் கொண்டுள்ளன? வேறு வழி இல்லாமல், உடைந்து போன நட்சத் திரங்களையும், ஊளையிடுகிற நரிகளையும் மனிதன் புகழ்ந்து பேசித் திரிகிறான்.

இந்த அற்பமான மனிதர்கள் இந்தப் புகழுக்கு எள்ளவும் உகந்தவர்கள் அல்லர் என்பதனை அவன் அறியமாட்டானா...? நாம் நம்மைச் சோதித்தாக வேண்டும். இறைவன் ஒருவனே என்று இஸ்லாம் அறிவிக்கிற போது, இறை அடிமைகளான மனித குலத்தவர் அனைவரும் ஒருவரே என்றுதானே பொருள்? இறைவனே நமது பேரரசன்; உலகத்தில் நம்மை ஆள வந்துள்ள மற்றோர் அவனது சின்னச் சின்ன பிரதிநிதிகள்; அதை அவர்கள் மறந்தால் வல்ல இறைவனே அவர்களுக்கு அதை நினைவு படுத்துவான்.

மதீனாவில் நபிநாதர்(ஸல்) அவர்கள் உருவாக்கிய முதல் சமுதாயத்தை உற்று நோக்குங்கள். போரிடுவதையே பொழுது போக்காகக் கொண்டிருந்த, குழுக்களாகப் பிரிந்து கிடந்த அரேபியர்களை ஒரு குடையின் கீழ் தம் வாழ்நாளிலே அவர் கொண்டு வந்தது வரலாற்று அதிசயம் அல்லவா? இறை அச்சத்தில் மக்களை ஒன்றி ணைத்து ஒழுக்கக் கேடுகளிலிருந்தும், தப்பறைகளிலிருந்தும், நபிநாதர்(ஸல்) அவர்களை விடுதலை செய்யவில்லையா?அந்த மக்களை நபிநாதர்(ஸல்) ஒன்று சேர்த்தது-மொழியை வைத்தா?நாட்டை வைத்தா?இனத்தை வைத்தா?எதை வைத்து...?இறைவனை வைத்து அவனது திருவெளிப்பாடான திருகுர்ஆன் என்ற நெறிநூலை வைத்து.அப்படி என்றால் இறை நெறிநூலின் அடிப்படையில் மாத்திரமே. அவனது வெளிப்பாட்டின் வண்ணம் மாத்திரமே இந்த ஒரே உலகம் சாத்தியமாகும் என்பதற்கான வல்ல அறிகுறிகள் உள்ளன அல்லவா?
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான்.அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான், பின்னர் இவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும், பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்: ஆகவே அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்: அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளை) கேட்டுக் கொள்ளுகிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர் களையும் (ஆதரியுங்கள்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பு உள்ளவனாக இருக்கிறான். (திருகுர்ஆன் 4:1)

என்று இறைவனின் நெறிநூல் உரைக்கின்றது. ஒரே உலகத்திற்கான இஸ்லாம் காட்டும் அடிப்படைகள் எவை என்று பார்த்தால்.
1. இறை அச்சம்2. ஒரே மனிதனிலிருந்து உண்டான உலக சமுதாயம்3. ஆண் பெண் சமத்துவம்4. தனிப்பட்டோர், சமுதாய உரிமைகள், கடமைகள்5. கடவுளின் நித்தியக் கண்காணிப்பு. ஒரே உலகத்திற்கான, தள்ள முடியாத, தவிர்க்க முடியாத அடிப்படைகள் இவை. இறைவனின் மீதான இஸ்லாமிய நம்பிக்கை உலக சமுதாயத்தை ஒரு சேரக் கட்டுகிற இணைப்புச் சங்கிலி; இஸ்லாமியத் தொழுகை மனிதர்கள் அனைவரும் சமம் என்பதை நிறுவுகிறது.

இஸ்லாத்தின் ரம்சான் மாத நோன்பு முஸ்லிம்களிடத்திலாவது உலக அளவில் ஒருமை காணுகின்றது. முஸ்லிம்களின் ஜகாத் வறிய சகோதர சகோதரிகளுக்கு வலியச் சென்று உதவ முன்வருகிற வழி. ஆதலால் இந்த உலகம் எல்லோருக்கும் உரியது என்றாகிறது.

இஸ்லாத்தின் ஹஜ் புனித யாத்திரை மனிதனுக்கு மனிதன் உள்ள வேறுபாடுகளை முஸ்லிம்கள் மத்தியிலாவது மறக்கடிக்கப் பண்ணுகிறது.பாழ்பட்டுக் கிடக்கிற உலகத்தை மீட்டு ஒரே உலகமாக இறைவனின் பூந்தோட்டமாக ஆக்குகிற பொறுப்பை இஸ்லாம் மேற்கொண்டுள்ளது.இல்லாவிட்டால் தனது சமுதாயக் கடமை களைச் சரிவர ஆற்றாத முஸ்லிம், இறைவனை உண்மையாகவே தொழ இயலாது என்கிற அளவிற்கு இஸ்லாம் சொல்லியிருக்காது.

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், பெண்ணிலிரிருந்தே படைத்தோம், நீங்கள் ஒருவரை - ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு, பின்னர், உங்க ளைக் கிளைகளாகவும், கோத்திரங்களாக வும் ஆக்கினோம், (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தி(தக்வா) உடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ் விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர், நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன் (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன். (திருகுர்ஆன் 49:13)

என்கிற திருகுர்ஆனின் வரிகள் ஒரு நாட்டினருக்கோ, மொழியினருக்கோ, இனத்தவருக்கோ உரியது என்று எவரேனும் குறிப்பிட இயலுமா? நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பொறுத்தமட்டில் மனிதர்களில் இரண்டே பிரிவினர்தாம்.

1. இறைவனுக்கு அச்சப்படுவோர்2. இறைவனுக்கு அஞ்சாதோர்
நபிகள் நாயகம்(ஸல்) மதீனாவில் உருவாக்கிய முதல் சமுதாயத்திலேயே ஆப்ரிக்கர்களும், பாரசீகர்களும் சகோதரர்களானார்கள். மனம் மாறி முஸ்லிமான பிலால் என்ற ஆப்ரிக்கர் உமர் குறைஷியாலேயே தலைவர் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

நேர்வழி நடவாத ஒரு அரேபியனை விட நேர்வழி நடக்கிற ஒரு ஆப்ரிக்கன் ஆளத் தகுதி பெற்றவன் என்று நபிகள் நாயகம்(ஸல்) அடிக்கடி எடுத்துக் காட்டுகிறார்கள். வேகமாக மாறிவருகிற உலகத்தின் சுகக்கேடுகளுக்கு இஸ்லாம் ஒன்றுதான் மாமருந்து என்றெனக்குத் தோன்றுகிறது.
இஸ்லாமிய வாழ்க்கையைக் கவனத்தில் கொள்ளாமல், புறந்தள்ளிவிட்டு உலக சகோதரத்துவம் பேசுவதும், 'ஒரே உலகம்' அடைவதற்குப் பாடுபடுவதும் மன்னிக்கவே முடியாத குற்றங்களாகும்.

இறைவன் நமது உலகத் தலைவர்களின் உள்ளங்களில் பேசட்டும், அவர்களும் ஆர்வத்தோடு அவனது மொழிகளைக் கேட்கட்டும், அப்போது ஒரே உலகம் தனது தத்துவார்த்த மேடையிலிருந்து இறங்கி, நிதர்சனத்தை நோக்கி உருளத் தொடங்கும்.

நூல் : இஸ்லாம் இந்த மண்ணுக்கேற்ற மார்க்கம், (வலம்புரிஜான்) பக்கம். 256-269)

ஞாயிறு, 4 ஜூலை, 2010

ஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை

ஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை

சகுந்தலா நரசிம்ஹன்
'ஹிஜாபை அணிந்தால்தான் உள்ளே வரமுடியும்' என்ற நிலை வந்தால் நான் சவூதி அரேபியாவிற்கே செல்ல மாட்டேன். என் கணவர் மட்டும் எவ்வித இஸ்லாமிய ஆடையையும் அணியாதபோது, நான் மட்டும் ஏன் அணியவேண்டும்? என்பதே எனது மறுப்பிற்கு முதல் காரணமாக இருந்தது. என்றாலும் எனது ஆர்வம் வெறுப்பை வென்றது.
சவூதி அரேபியாவின் ரியாத் ஏர்போர்ட்டில் நான் கால்வைத்த கணத்திலேயே மிகவும் பண்போடு "பெண்கள் பகுதி" க்கு அழைத்துச் சென்று அமர வைக்கப்பட்டேன். விசாச் சடங்குகளை முடித்துவர என் கணவர் சென்றிருக்கும் வேளையில் ஒரு குட்டி அரண்மனை போன்று மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்த அந்த அறையின் அலங்காரங்களில் மனம் லயித்துப் போனேன். செல்வச் செழிப்புடன் கூடிய கண்ணியமும் கெளரவமும் ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவருக்கும் கொடுக்கப்படுவது என் மனதை முதன் முதலாகத் தொட்டு விட்டது!
சவூதிக்குக் கிளம்பும் முன்னரே அங்குள்ள ஹிஜாப் பற்றிய விதிமுறைகளைப் பற்றி அறிந்திருந்த காரணத்தினால், புர்காவினைக் கையோடு கொண்டு வந்திருந்தேன். என்றாலும், ஏர்போர்ட் ஃபார்மாலிட்டீஸ்களை முடித்து நகரத்தின் அழகான வீதிக்களைக் கடந்து ஃபைஸலியா ஹோட்டல் வந்து சேரும் வரை நான் புர்காவை அணிந்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் யாரும் சொல்லவேயில்லை. மறுநாள் காலையில், ஹோட்டல் நிர்வாகத்தினர் அழகான எம்ராய்டரிங் செய்யப்பட்ட புதிய கறுப்பு நிற அபாயா (இந்தியாவில் நாம் புர்கா என்று சொல்லும் உடையை சவூதியில் இவ்வாறு தான் அழைக்கிறார்கள்) ஒன்றினைக் கொடுத்தார்கள்.
இதனை நான் அணிந்து கொண்டால் வெளியே செல்லும் வேளையில் அதிக சவுகரியமாக இருக்கமுடியும் என்று கனிவோடு ஆலோசனை கூறினார்கள். "சவுகரியமா? இதன் மூலமா?" என்று மனதில் கேட்டுக் கொண்டேன். எனது தோற்றத்திற்கும், தனித்தன்மைக்கும் வேட்டு வைக்கும் இந்த உடை, எனக்கு சவுகரியத்தை அளிக்கப்போகிறதா? என்ற கேள்வியை வெளிக்காட்டாமல் சற்றே சினத்துடன் வாங்கி வைத்துக் கொண்டேன்!. ஆனால் நான் ரியாதில் தங்கியிருந்த அடுத்த ஆறு நாட்களில் என் எள்ளலுக்கும் சினத்திற்கும் தகுந்த பதில் கிடைத்தபோது வியப்பிலாழ்ந்து போனேன்.
நோபல் பரிசுக்கு இணையாக அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் உலகளாவிய அளவில் சாதனை படைக்கும் விஞ்ஞானிகளுக்கான விருதுகளையும் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசுகளையும் ஆண்டுதோறும் வழங்கும் சர்வதேசப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பு எனக்கு விடுக்கப்பட்டிருந்தது.
மறுநாள் காலையில், அரண்மனையின் உயரிய கம்பீரத்தோடு, பிரம்மாண்டமாய் அலங்கரிக்கப்பட்டிருந்த "பிரின்ஸ் சுல்தான் க்ராண்ட் செரமோனியல் ஹால்" இல் அடியெடுத்து வைத்த எனக்குப் புதிய வியப்பு ஒன்று அறிமுகமானது. அத்துணை பெரிய சபையில் பெண்களுக்காகத் தனிப் பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. பூக்களை மொத்தமாக இறக்குமதி செய்யும் பெரும் நிறுவனம் ஒன்றின் பெண் உரிமையாளர் எனது வலப் பக்கத்திலும் அவருக்கு அருகில் ஒரு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் போதிக்கும் பெண் நிபுணரும் அமர்ந்திருந்தனர். ஒரு முழு ஆண்டின் பெரும்பகுதி நேரத்தினை நியூயார்க்கில் செலவழிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றின் தலைவியும் ஜே ஆர் டி டாட்டாவின் நெருங்கிய தோழி என்று அறியப் பட்டவருமான ஒரு பெண்மணி எனது இடப்பக்கத்திலும் அவருக்கு அருகில் இளம் பத்திரிகையாளர் பெண் ஒருவரும் அமர்ந்திருந்தார்.
ஜித்தாவிலிருந்து வந்திருந்த 'மிகப் பெரும் சொத்துக்களுக்கு வாரிசுதாரர்' என்று அறியப் பட்ட ஒரு பெண்ணும் எங்களோடு அமர்ந்திருந்தார். சரி, இதில் வியக்க என்ன உள்ளது என்கிறீர்களா? அவர்கள் அனைவருமே அணிந்திருந்தது கறுப்பு நிற ஹிஜாப் உடை தான். என்னருகில் அமர்ந்திருந்த பெரும் நிறுவன உரிமையாளரான அந்த இளம் பெண் விழா நிகழ்ச்சிகளைப் படம் எடுத்துக் கொண்டிருந்த டிவி கேமராக்கள் எங்களை நோக்கித் திரும்பும் நேரத்தில் எல்லாம் விலகியிருக்கும் தன் முகத்திரையினை சரி செய்து முகத்தை மூடிக் கொண்டார்.
புதிராகப் பார்க்கும் என் பார்வையினைப் புரிந்தவராக என் பக்கம் சாய்ந்து, "கேமராக்கள் நம்மைப் படம்பிடிப்பதை விட்டும் விலகி விட்டால் எனக்கு தெரியப் படுத்துங்கள்!" என்றார். நிகழ்ச்சிக்கு வந்த மற்ற அனைத்துப் பெண்களைப் போலவே இவரும் மிக அழகிய ஆங்கிலம் பேசுவதைக் கேட்டு வியப்பு விலகாமல் ஆர்வத்துடன் நெருங்கி கேட்டேன்: "எதனால் தங்கள் முகத்தினைக் கேமராமுன் காண்பிக்க மறுக்கிறீர்கள்?" அதற்கு அவர், "நீங்கள் இப்போது அணிந்துள்ள புடவை, ஏதேனும் ஒன்றில் சிக்கி, உங்கள் முழங்கால் வெளியே தெரிவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் அல்லவா? அது போலவே அறிமுகமற்றப் புதியவர்கள் என் முகத்தைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை!" என்றார்.
"முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவிக்கப்பட்டு அடிமைப்படுத்தப் படுகிறார்கள்" என்ற சொல்லையே இந்தியாவில் திரும்பத் திரும்ப கேட்டிருந்த என் மனதினுள் இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. என் அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பெண் தனது கைகளுக்கும் விரல்களுக்கும் உதட்டுக்கும் கண்களுக்கும் தேர்ந்த ஒப்பனை செய்திருந்ததையும் கவனித்தேன். மனதில் எழுந்த கேள்விகளை அடக்க முடியாமல் அவர் பக்கம் நெருங்கினேன். "இத்தனை அற்புதமான அலங்காரங்களைச் செய்துள்ள உங்கள் அழகை இந்த புர்கா சிதைக்கவில்லையா?" பொருளாதார நிபுணரான அப்பெண் மென்மையாக சிரித்தவாறே கூறினார். "இல்லவே இல்லை! இத்தனை அலங்காரங்களையும் என் சந்தோஷத்திற்காக மட்டுமே செய்கிறேன். நம் சுவைக்குத் தக்கவாறு உணவைத் தேர்ந்தெடுத்துச் சுவைத்துச் சாப்பிடுவது நமது தனிப் பட்ட விருப்பமில்லையா அது மாதிரி...!" என்றார்.
அத்துடன் நில்லாமல், "இந்த அழகு அலங்காரங்கள் எல்லாம் வேற்று ஆண் ஒருவரை ஈர்ப்பதற்காக அல்லவே? பின்பு ஏன் கவலை?" என்றார். அப்படியென்றால் இத்தனை காலம் மேற்கத்திய மற்றும் கீழத்தேய எழுத்தாளர்கள் அனைவரும், "புர்கா என்பது பெண்ணடிமைத்தனம் என்று கூறி வந்தது பொய்யா?" என்ற பெரிய கேள்வி ஒன்று பூதாகரமாக என் மனதில் உருவாவதை உணர்ந்தேன்.என் கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் வாரிசுதாரரான ஜித்தாப் பெண்ணிடமும் இது பற்றி உரையாடினேன்.
"உங்களுக்குத் தெரியுமா?" என்று என்னிடம் கேள்வி எழுப்பினார் செல்வச் சீமாட்டியான அந்த பெண். "மேற்கத்திய நாடுகளின் என் பயணங்களில் கவனித்திருக்கிறேன். அலுவல் சார்ந்த உயர் நிகழ்ச்சிகளில் உடல் முழுமையாக மறையும் வண்ணம் பிஸினஸ் சூட் அணிந்து வரும் மேற்கத்தியப் பெண்கள் பலர் இருக்கிறார்கள். இத்தகையோரின் உடைக்கும் ஹிஜாபுக்கும் பெருத்த வித்தியாசம் ஏதுமில்லை!" என்றார்."கறுப்பு நிறக் கலாச்சார உடையினை உடல் முழுவதும் சுற்றிக் கொள்ளுதல்" என்று பலரை இதுநாள் வரை கேலி செய்திருந்த எனக்கு, யதார்த்தமான இப்பதில் வெகுவாக யோசிக்க வைத்தது.பொறுமையின் எல்லையைக் கடந்தவளாக ஆர்வம் மிகுதியில் என் கையில் கொண்டு வந்திருந்த புர்காவை எடுத்து அணிந்து பார்த்தேன்.
எடுத்த எடுப்பில் சற்றே வெறுப்பாய் உணர்ந்த நான், அடுத்த சில நாழிகைகளில் எனது வெறுப்புத் தளர்வதை உணர ஆரம்பித்தேன். பிற்பாடு ஹிஜாப் அணிந்தவண்ணம் வெளியே செல்லவும் ஆரம்பித்தேன்.என் போன்றே ஹிஜாப் அணிந்து பார்த்த, மருத்துவத்துறைக்கான பரிசினை வென்ற அமெரிக்கர் ஒருவரின் மனைவி பெண்களின் கூட்டத்திற்கிடையே பேசுகையில், "தான் அணிந்துள்ள ஹிஜாப் மூலம், தான் மிகவும் சவுகரியமாகவே உணர்வதாக"க் குறிப்பிட்டார்.
"சுருக்கங்கள் நிறைந்த, அடிக்கடி விலகும் எனது ஸ்கர்ட் பற்றி இனிக் கவலையில்லை!" என்று கூறி அங்குள்ள பெண்கள் அனைவரையும் சிரிக்கச் செய்தார்.வியப்பில் என் விழிகள் அகலும் வண்ணம் நாங்கள் பார்வையிடச் சென்ற தேசியக் கண்காட்சி மையம், பல்கலைக் கழகம், மருத்துவ-ஆராய்ச்சி மையம் என்று எங்கு, எப்பணியில் நோக்கினாலும் பெண்கள் தடங்கலின்றி சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ஹிஜாப் அணிந்தவண்ணம் பணிகளில் ஈடுபட்டிருந்ததைத் தனியாகச் சொல்லவும் வேண்டுமா?அறிவியல், தொழில்நுட்ப ஆய்வாராய்ச்சி நிலையங்களிலும் உயர் தொழில்நுட்பப் பணிகளிலும் அநாயசமாகவும் எளிமையாகவும் அப்பெண்கள் ஹிஜாபுடன் எவ்வித இடைஞ்சலுமின்றி செயற்படுவதைக் கண்டு வியப்பின் எல்லைக்குச் சென்றேன்.
இந்தியத் தூதர் M.O.H ஃபாரூக் அவர்கள் எங்களுக்காக அவர் வீட்டில் அளித்திருந்த உயர் ரக விருந்தில்கூட பெண்கள் (அதிகாரிகளின் மனைவிகள்) அனைவருக்குமான தனித்த இடத்தில் விருந்து நடந்தது.அதன் பிறகு ஒரு நாளில், கோல்டு மார்க்கெட் எனப்படும் தங்க நகைகள் விற்கும் கடைவீதிக்குச் சென்று வந்தேன்.
(பார்ப்பதற்கு மும்பையின் ஜாவேரி பஜார் போன்று ஆனால் அதைவிடச் சிறப்பாக இருந்தது இப்பகுதி) அப்பகுதியில் உள்ள ஷாப்பிங் மால்கள் அனைத்திலும் ஹிஜாபுடன் ஏறி இறங்க எனக்கு மிக மிக எளிமையாகவே இருந்தது.அந்நேரத்தில் அப்பகுதிகளில் சவூதி நாட்டு படித்த இளம் பெண்கள் பலரைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அப்படி பார்த்த பல பெண்கள் தங்கள் கைகளில் லேட்டஸ்ட் டெக்னாலஜி மொபைல் ஃபோன்களை வைத்துக் கொண்டு மகிழ்வுடன் பேசிக் கொண்டிருந்தனர்.
பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் அமர்ந்து, தன் மொபைல் ஃபோனில் டயல் செய்து கொண்டிருந்த ஓர் இளம் பெண்ணை அணுகினேன். அந்தப் பெண், நவீன கலாச்சாரச் சூழலில் வளர்ந்தவர் என்பது பார்க்கும் பார்வையிலேயே தெரிந்தது. படித்த, பகட்டான உடையணிந்த பெண் என்பதால் ஹிஜாப் குறித்த மாற்றுச் சிந்தனையை எதிர்பார்த்து அணுகினேன்."நீங்கள் ஹிஜாபை விரும்பித்தான் அணிகிறீர்களா?" என்று கேட்டு விட்டேன்.
நொடிக்கூட தாமதிக்காமல் பதில் வந்தது: "இது எனக்கு கண்ணியத்தைப் பெற்றுத் தருகிறது. மேலும் ஒரு உள்ளாடையை அணிவது போன்று எளிமையாகவும் இருக்கிறது" என்றார்.என்னை ஏறிட்டு நோக்கியவர், என் மனதில் உள்ள குழப்பங்களைப் படித்தது போன்று எதிர்கேள்வி ஒன்றையும் என்னிடமே போட்டார்:"செரினா வில்லியம்ஸ், இப்போது அணிந்துள்ள ஸ்கர்ட்டை விடச் சிறிய, பிகினி உடையினை அணிந்தால் இன்னும் வேகமாக அவரால் ஆட முடியும்தான். ஆனால் அது அவருக்கு சவுகரியமாக இருக்காது என்பதால் அவர் செய்ய மாட்டார் இல்லையா?" என்றார்.
இதுநாள் வரை எனக்குக் கிடைக்காத சில விடைகள் சரசரவென்றுக் கிடைக்க ஆரம்பித்தன. இச்சூழலில், மும்பையின் மலபார் ஹில் பகுதியில் ஒருமுறை நான் கலந்து கொண்ட திருமண டின்னர் பார்ட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. மணமகளாக அலங்காரம் செய்யப்பட்ட பெண் ஒருத்தி, பல்லாயிரம் ரூபாய்கள் செலவழித்து சிகை அலங்காரம் செய்திருந்தாலும் Ghoonghat எனப்படும் முக்காடு கொண்டு தலைப்பகுதியினை நிகழ்ச்சி முழுவதும் தன்னை மறைத்திருந்தாள். அவளது அலங்கரித்த தலைமுடியை மறைத்திருப்பது பற்றி நான் எழுப்பிய வினாவிற்கு, "கூன்கட் எனப்படும் தலையினை மறைப்பதுதான் பெரியோர்களுக்குச் செய்யும் மரியாதையாகும். இது எங்கள் பாரம்பரிய கலாச்சாரமாகும்; நான் ஏன் அதை மீற வேண்டும்?" என்று பெருமையாகக் கூறுயதே விடையாகக் கிடைத்தது.
எனவே எனக்கு ஏற்பட்ட பலவித அனுபவத்திலிருந்து சில முடிவுகளுக்கு வந்தேன்.மும்பையில் ஒரு சமுதாயத்தின் பாரம்பரிய கலாச்சாரத்திற்காக ஒரு பெண் தலையை மறைப்பது பெருமையாக கருதப்படுவதும் அது ஆண்களிடையே 'அடிமைத்தனம்' என்ற கூக்குரலாக வெளியே வருவதில்லை. ஆனால், இஸ்லாத்தில் பெண்கள் ஹிஜாப் அணிகையில் மட்டும் 'பெண்ணடிமை'த் தனமாக உருவகப்படுத்தப் படுவது ஏன்? என்ற நெருடல் அவ்வேளையில் எழுந்தது.ஒவ்வொரு நாட்டிலும் பெண்ணின் உடை அளவிலான கோட்பாடுகள் என்பது உள்ளது என்பது மறுக்கவே முடியாத உண்மை. ஆனால் அது அவரவர் கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு ஏற்று மாறுபடுகிறது. செரினா வில்லியம்ஸின் உதாரணம் உட்பட. என்னுடைய ஆறாவது நாளின் முடிவில் அபாயா (ஹிஜாப்) அணிந்த பெண்களில் ஒருத்தியாக என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
இந்த உடை அணிந்ததன் மூலம் நான் எதுவும் சிரமமாக உணர்கிறேனா?பெண்ணுரிமைக்காக கடுமையாகப் போராடுபவள் என்ற உணர்வில் இருந்து சற்றும் மாறுபடாமல் என் அடிமனதில் இருந்து எழுந்த பதில்,இல்லை. எனக்கு எந்தச் சிரமமும் இல்லவே இல்லை!சவூதி அரேபியாவுக்குச் சென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்! அங்கே ஹிஜாப் அணிந்து வலம் வந்தபோதும்!