திங்கள், 16 ஆகஸ்ட், 2010

www.orkadavul.com


பெற்றோர்களின் மத நம்பிக்கை அவர்களின் ஆன்மீக எதிர்பார்ப்பை நிறைவேற்றாதாலும் வரும் கேள்வி அறிவுக்கு புராதன நம்பிக்கைகள் ஈடு கொடுக்க முடியாததாலும் அமெரிக்காவில் இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே போகிறது,சமீபத்தில் அமெரிக்கா இஸ்லாமியக் கவுன்சில் நடத்திய ஒரு ஆய்வில் இது தெரிய வந்தது.
தேசிய அளவில் அமெரிக்காவில் உள்ள கிரேட்டர்போஸ்டன் முஸ்லிம் சமூகத்தில் பெண்களே மூன்றில் இரு பங்காக இருக்கிறனர்.இஸ்லாத்தின் பக்கம் பெண்கள் அதிகமாக ஈடுபடுவதால் புதிர் இருப்பதாக அப் பெண்களின் குடும்பத்தார் கருதுகின்றனர். எந்த ஒரு சமயம் பெண்களை அடிமைபடுத்தி அடக்கி ஆள்கிறது என்று உருவகப்படுத்திக் காட்டப்படுகிறதோ அந்த மதத்தை நோக்கிப் பெண்கள் அதிகமாக ஈர்க்கப்படுவதுதான் அவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது, ஆனால் புதிதாக இஸ்லாத்தை தழுவிய முஸ்லிம் பெண்கள் ஒரு சேர அக்குற்றச் சாட்டை மறுக்கின்றனர்.
பிரச்சார நோக்கத்துடன் இஸ்லாத்தின் மீது பொய்யான தோற்றத்தை உருவகப்படுத்திக் காட்டப் படுகிறது என்று அவர்கள் வாதிடுகிறார்கள். அதற்கு உதாரணமாக சொத்துரிமை வாரிசுரிமை ஆகிய உரிமைகளை மேலை நாட்டு கலாச்சாரம் பெண்களுக்குக் கொடுப்பதற்;கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் பெண்களுக்கு வழங்கி விட்டது என்று அவர்கள் கூறுகிறார்கள்.இஸ்லாத்தை தழுவும் வெள்ளை கிறிஸ்துவப் பெண்கள் வாழ்க்கையில் இஸ்லாம் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்துகிறது, இப்புதிய முஸ்லிம் பெண்கள் தங்கள் தலைமுடியை ஹிஜாப் என்னும் தலைதுண்டினால் மூடி மறைத்துக் கொள்கிறார்கள்.
அவர்கள் அணியும் ஆடையிலும் வித்தியாசம் தெரிகிறது, கவர்ச்சி ஆடையை அவர்கள் வெறுக்கிறார்கள.நீண்ட தொளதொளப்பான ஆடையை அணிகின்றனர். அது அவர்களின் ஒழுக்க மாண்பை கூட்டிக்காட்டுகிறது. அவர்களின் உணவுப்பழக்கமும், இஸ்லாமிய விதிமுறைக்கு மாறுகிறது. பன்றி மாமிசத்தை அவர்கள் தொடுவதில்லை. புகைப்பது இல்லை. குடிப்பழக்கத்துக்கு அவர்கள் முழுக்குப் போடுகிறார்கள். அவர்களின் ஆன்மீகப்பாதை ஐங்காலத் தொழுகை இடம் பிடித்துக் கொள்கிறது.
இஸ்லாத்தை ஏற்றதும் அவர்கள் புதுப்பொழிவுடன் புதிய மனிதர்களாக உள்ளும் புறமும் மாற்றமடைகின்றனர். அவ்வாறு மாற்றமடைந்த பெண்கள் சிலரின் தகவல்களைத் திரட்டி கிழே தருகிறோம்:கிரேஜினோ கிரேட்டர், போஸ்டனில் உள்ள ஒரு கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்தவர், அவரின் தந்தை நம்பிக்கை இழந்து விட்ட கத்தோலிக்கர், தாயோ விறுவிறுப்பான பெந்த கொஸ்ட். கிறிஸ்துவ சமயப் பற்றுக் கிடையே கிரேஜினோ அலைகழிக்கப்பட்டார். சந்தோஷமும் குழப்பமும் அவர் மனதில் குடிகொண்டிருந்தது அப்பொது அவருக்கு வயது 14. வெல்ஸலி ஜூனியர் கல்லூரியின் மாணவி, குழப்பத்திலிருந்து தன்னைத்தானே விடுவித்துக் கொண்டு உலக மதங்களை ஆராய முற்பட்டார். புத்தம், ஹிந்து, யூதம், மற்றும் இஸ்லாம் ஆகியவைகளை ஆழ்ந்து படித்தார்.
முடிவில் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்டார். இஸ்லாம்தான் தனது தாயின் கிறிஸ்துவத்தை விடவும் உண்மையை ஒங்கி ஒலிக்கிறது என்று நம்புகிறார். கடந்த மார்ச் 8-ம் தேதி போஸ்டனில் உள்ள பள்ளிவாசலுக்குச் சென்று அல்லாஹ்வைத்தவிர வணக்கத்துக்குரிய கடவுள் யாருமில்லை முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்,, என்று ஷஹாதத் (இஸ்லாமிய உறுதி மொழி) சொல்லி இஸ்லாத்தில் இணைந்தார்.கிறிஸ்துவச் சமயம் வாரம் ஒரு முறை சர்ச்சுக்குப் போவதும் ஒரு நல்ல மனிதராக இருப்பதும் மட்டுமே. ஆனால் இஸ்லாம் ஒரு முழு வாழ்க்கை நெறி என்று அவர் கூறிகிறார். மகளின் மனமாற்றம் அவரது தந்தைக்கு அடங்காக் கோபத்தை ஏற்படுத்தியது, உனக்கு ஒரு நல்ல வேலையோ அல்லது நல்ல கணவனோ கிடைக்காது, என்று அவர் வருந்துகிறார்.
அவரது தாய் அழுது தவித்து ஏசுவை துணைக்கு அழைக்கிறார். வசந்த கால விடுமுறையில் வீட்டிற்குப் போன கிரேஜினோவிற்கு நல்ல வரவேற்பு இல்லை. அவரது தந்தை, ஹிஜாப் அணிந்த அவரை பார்க்க சகிக்காமல் தனது மற்ற குழந்தைகளையும் அவரோடு பழக விடாமல் தடுக்கிறார். ஆனால் இஸ்லாம் குடும்ப உறவு முறையை பேணிக் கொள்ள அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அதனால் கிரேஜினோ தமது உறவுகளைக் குடும்பத்துடன் புதுப்பித்துக்கொள்ள இன்னும் முயற்சி செய்து வருகிறார், ஆனால் அது கடினமானதாக அவருக்கு தெரிகிறது. ஏனெனில் அவரது தந்தை கல்லூரிக்கு கட்டவேண்டிய கட்டணத்தை கட்டுவதை நிறுத்தி விட்டார்.இருப்பினும் கிரேஜினோ ஹிஜாப் அணிவது தம்மை பல சங்கடங்களிலிருந்து விடுவிக்கிறதென்று கூறுகிறார்.
சுருள்சுருளான இடுப்பு வரை நீண்ட அழகிய தலைமுடி அவருக்குண்டு. ஹிஜாப் அணியாத காலங்களில் துடுக்குதனம் கொண்டோரை சந்திக்க நேரும் போது அவர்களில் சிலர் நெருங்கி வந்து, இந்த அழகிய கூந்தலை நான் தொடலாமா? என்று தன்னை முட்டாளாக்கி இருக்கிறார்கள் என்று கூறுகிறார். இப்பொது ஹிஜாப் அணிவது தம்மை இப்படிப் பட்ட இடர்பாடுகளில் இருந்து காப்பாற்றி இருக்கிறது என்று சொல்கிறார். இப்போது தன்னை யாரும் உற்று நோக்குவதில்லை. உடல் அழகையோ, உருவ அமைப்பையோ, கூந்தல் அலாங்காரத்தையோ யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை.
குறும்புத்தனம் செய்பவர் கண்ணுக்கு நாம் தெரிவதில்லை என்று கிரேஜியானோ கூறுகிறார்.மற்றுமொரு பெண்மணி கிறிஸ்டினா சபியா டோபியாஸ்நாகி. அவர் சாமர்வில்லாவைச் சேர்ந்தவர். அவரின் தந்தை ஒரு கத்தோலிக்கர். தாய் ஒரு யூதர். ஆனால் அவர் யூத மதக்கோட்பாடுளை கடைபிடிப்பதில்லை. சபியாவுக்கு வயது முப்பது. ஆறு ஆண்டுகளுக்கு முன் அவர் இஸ்லாத்தை தழுவினார்.மேலைநாடுகளில் கடைபிடிக்கப்படும் இஸ்லாம் இலட்சியமாக இல்லாதது துரதிருஷ்டவசமானது, இங்கு நாம் எப்படி இஸ்லாத்தைக் கடைபிடிக்கிறோம் என்பதை பல நாடுகள் அக்கறையுடன் கவனித்து வருகிறன்றன.
அந்நாடுகளில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் நாம் சரியான உதாரணமாக அமையலாம். ஏனெனில் உலகில் வேறு நிலப்பரப்புகளை விடவும் அமெரிக்காவில் நிலவும் அதிகப்படியான சமத்துவ ஒருமைப்பாடு கொண்ட இஸ்லாமியக் கலாச்சாரம் அவர்களுக்கு சிறந்த முன் மாதிரியாகத் திகழும் திறம் படைத்தது. அது உலக அளவில் முஸ்லிம்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தவல்லது என்று சபியா கூறுகிறார்.மார்சியா. கே.ஹெர்மான்சென் சிகாகோவில் உள்ள லயோலா பல்கலைக்கழகத்தின் சமயத்துறை பேராசிரியர். அவர் இப்புதிய நூற்றாண்டுத் துவக்கத்தின் பல் வேறு வழிகளில் இளைஞர்கள் இஸ்லாத்தை அறிந்து கொள்கின்றனர் அது தங்கள் வாழ்வில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி மனதை அமைதிபடுத்தி வைக்கிறது என்று கூறுகிறார்கள் என்று கூறுகிறார்.
ஹோடா எல்-ஷர்காவி என்ற பெண்மனி, கேம்பிரிட்ஜ் பள்ளிவாசலில் புதிய முஸ்லிம் பெண்களுக்கு உதவி செய்ய வகுப்புக்கள் நடத்துகிறார். இப்படி பல புதிய முஸ்லிம் பெண்கள் எல்லாம் கற்றறிந்து கல்விமான்களாக விளங்குகின்றனர். அவர்கள் சமய சகிப்புத்தன்மை கொண்ட பல்கலைகழக வளாகத்துடன் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றனர்;.லோரா கோவன் ஹார்வார்டு கல்லூரியின் ஜூனியர் கல்லூரி மாணவி. அவரின் வயது 20. அவரின் சக மாணவர் ஒருவர் அவருக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தினார். பின்னர் தனது இஸ்லாமிய அறிவை இன்டர்நெட் மற்றும் கல்லூரி வகுப்பறை இவைகளில் வளர்த்துக் கொண்டார். 4 மாதங்களுக்கு முன் ஷஹாதத் சொல்லி இஸ்லாத்தை ஏற்றார்.
இஸ்லாத்தைப் பற்றி நான் கண்டது, கேட்டது அனைத்தும் என் அறிவுக்குப் பொருத்தமாக இருக்கிறது. நான் தொழுகையை நிறைவேற்றிய ஒவ்வொரு வேளையிலும் என் தோளிலிருந்து பெரும் சுமை கீழிறக்கப்பட்டதாக உணர்கிறேன். அது வர்ணிக்க முடியாத உணர்வு. அந்த நேரத்தில் நான் தனிமையில் விடப்பட்டதாக உணர்கிறேன் என்கிறார் நெகிழ்வுடன். நாகரிகத்தின் உச்சாணிக் கொம்பில் இருப்பதாக சொல்லப்படும் அமெரிக்காவில் இஸ்லாம் இவ்வாறெல்லாம் வேகமாக பெண்களை கவர்ந்துள்ளது.
நன்றி: தமிழ்முஸ்லிம்.காம்

மனித வாழ்வு இவ்வுலகோடு முடிவு பெற்றால்!

மனித வாழ்வு இவ்வுலகோடு முடிவு பெற்றால்!

- அபூ ஃபாத்திமா
எண்ணற்ற பிராணிகளைப்போல், பகுத்தறிவுள்ள மனிதனும் ஒரு பிராணியே. சிலர் சொல்லுவது போல் அவனுக்கு மறுமை வாழ்க்கை என்று ஒன்றில்லை. மனிதன் மரணிப்பதோடு அவனது வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. மற்ற பிராணிகளைப் போல் அவனும் வாழந்து மடிந்து மண்ணாகிப் போவதே அவனது இறுதி முடிவு என்பது நாத்திக நண்பர்களின் உறுதியான முடிவு.இந்த அவர்களின் முடிவின் அடிப்படையில் எமக்குச் சில ஐயங்கள் எழுகின்றன. அவற்றைத் தீர்த்து வைப்பது அவர்களின் கடமையாகும்.நாத்திகர்கள் தாங்கள் தான் அசலான பகுத்தறிவாளர்கள் என்று பறைசாற்றிக் கொள்வது ஊர் அறிந்த உண்மை.
எனவே எமது சில பகுத்தறிவுக் கேள்விகளுக்கு விடை தருவது அவர்கள் மீதுள்ள பொறுப்பாகும். அவர்கள் தரும் பதில்களிலிருந்து அவர்கள் பகுத்தறிவுப் பாசறையிலுள்ளவர்களா? அல்லது ஐயறிவு பாசறையிலுள்ளவர்களா? என்பதை எம்போன்றவர்கள் விளங்கிக் கொள்ள முடியும்.உலகில் காணப்படும் கோடான கோடி ஜீவராசிகளைப் போல் அதாவது புழு பூச்சிகளைப் போல் மனிதனும் ஒரு புழு -பூச்சியே - ஒரு பிராணியே ஜீவராசியே! அனைத்து உயிரினங்களும் மடிந்து மண்ணணாகிப் போவது போல் மனிதனும் மடிந்து மண்ணாகி போகின்றவன்தான். மற்றபடி அவனுக்கொரு ஆத்மாவோ, மறுமை வாழ்க்கையோ இல்லை என்பதே நாத்திகர்களின் பகுத்தறிவு வாதம். அதாவது உலக வாழ்வோடு மனித வாழ்வு முற்றுப் பெற்று விடுகிறது. அதன் பின் ஒரு தொடர்ச்சியும் இல்லை என்பதே அவர்களின் வாதம்.
இப்போது அவர்களின் வாதத்தில் நமக்கு ஏற்படும் ஐயங்கள் இவைதான்.மற்ற படைப்பினங்களைப் போன்றதொரு சராசரி படைப்பினமே மனிதன் எனும் போது மற்ற படைப்பினங்களுக்குரிய சட்டங்களே மனிதனுக்கும் பொருந்த வேண்டும். மற்ற படைப்பினங்களைப் பொருத்தமட்டிலும் "வல்லனவற்றின் வாழ்வு வளம்" (Survival of the fittest) என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே அவற்றின் வாழ்வு அமைந்துள்ளது. அதாவது வலிமையுள்ளவை வலிமையற்றவற்றை வீழ்த்தி, அல்லது அழித்து தம்மை வளப்படுத்திக் கொள்கின்றன. உதாரணமாக பெரிய மீன்கள் சிறிய மீன்களைக் கொன்று தமக்கிரையாக்கி கொள்கின்றன. சிங்கம், புலி போன்றவை மான், மாடு போன்றவற்றைக் கொன்று தமக்கிரையாக்கிக் கொள்கின்றன. இந்த "வல்லனவற்றின் வாழ்வு வளம்" புழு, பூச்சியிலிருந்து, ஊர்வனவற்றிலிருந்து, நாலு கால் பிராணிகள் வரை பொருந்தும், தரையிலுள்ள பிராணிகளுக்கும் பொருந்தும்.
இந்த சித்தாந்தத்தை நாத்திக பகுத்தறிவாளர்கள் அநீதி என்று தீர்ப்பு அளிப்பதில்லை.அப்படியானால், அந்த ஜீவராசிகளைப் போன்றதொரு புழு, பூச்சி-மிருகம் போன்ற ஜீவராசிதான் மனிதன் என்று நாத்திக பகுத்தறிவாளர்கள் கூறும் போது, அதே "வல்லனவற்றின் வாழ்வு வளம்" (Survival of the Fittest) என்ற சித்தாந்தம் மனிதனுக்கும் பொருந்திப் போக வேண்டுமல்லவா? மனிதர்களிலும் வலியவர்கள் வலிமை அற்றவர்களை வீழ்த்தி தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்வதை அநீதி என்று கூற முடியுமா? இல்லை; இது அநீதி என்று நாத்திகர்கள் கூறுவார்களேயானால், எந்த அடிப்படையில் அநீதி என்று கூறுகிறார்கள்? மற்ற படைப்பினங்களைப் போன்றதொரு, மண்ணோடு மண்ணாகிப் போகும் ஒரு படைப்புத்தானே - புழு பூச்சிதானே, மிருகம் போன்றவன்தானே மனிதனும் நாத்திகர்களின் கூற்றுப்படி அப்படியானால் மற்றப் படைப்பினங்களுக்குப் பொருந்திப் போகும் "வல்லனவற்றின் வாழ்வு வளம்" (Survival of the fittest) என்ற கோட்பாடு மனிதனுக்கு மட்டும் ஏன் பொருந்திப் போகாது? இதற்குரிய சரியான விளக்கத்தை பகுத்தறிவு அடிப்படையில் தரக் கடமைப்பட்டிருக்கிறார்கள் நாத்திகர்கள். அது மட்டுமல்ல; மற்ற படைப்பினங்கள் விஷயத்தில் அது நீதியாகும்; மனிதப்படைப்பு விஷயத்தில் அது நீதியாகும்; மனிதப்படைப்பு விஷயத்தில் மட்டுமே அது அநீதியாகும் என்று பிரித்துச் சட்டம் சொன்ன அதிகாரம் பெற்ற சக்தி எது? இதற்கு பகுத்தறிவு ரீதியாக விளக்கம் தரக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
நீதிக்கும், தர்மத்திற்கும் கட்டுப்பட்டு வாழ்பவர்களில் பெரும்பாலோர் வறுமையிலும், துன்பங்களிலும் சதா உழன்று மடிகிறார்கள். அவர்கள் நீதிக்கும், தர்மத்திற்கும் உட்பட்டு வாழ்ந்ததற்குரிய நற்பலனை இவ்வுலகில் அனுபவிக்கவில்லையே! அப்படியானால் எங்கே பெறுவார்கள்?அடுத்து வலுவில்லாதவர்கள் வலுவானவர்களை அடக்கி ஒடுக்கி தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வது அநீதியே என்ற பகுத்தறிவு ரீதியாகவும் மனச்சாட்சியின் படியும் அப்பட்டமாக ஒப்புக் கொண்டிருக்கும் நாத்திகர்களில் பலர், இன்று அதற்கு மாறாக மக்களையும் அரசையும் அதிகாரிகளையும் ஏமாற்றி அல்லது லஞ்சம் கொடுத்து கோடி, கோடியாகக் கொள்ளை அடித்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சொத்துக்களைக் குவித்துக் கொண்டிருக்கிறார்களே? இதற்குக் காரணம் என்ன? அவர்கள் அநீதி என்று ஒப்புக் கொண்டுள்ளதற்கு மாற்றமாக - மக்களிடம் அநீதி என்று அப்பட்டமாக அறிவிப்பதற்கு மாற்றமாக அந்த அநீதியான கொள்ளை அடிக்கும் செயலை செய்ய அவர்களைத் தூண்டும் சக்தி எது? அவர்களது பகுத்தறிவும், மனச்சாட்சியும் பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமற்ற செயல் என்று ஒப்புக்கொள்ளும் குடி, விபச்சாரம், சூது போன்ற தீய காரியங்களில் அவர்களில் பலர் மூழ்கி இருக்கிறார்களே? இத்தீய செயல்களைச் செய்ய அவர்களைத் தூண்டும் சக்தி எது?
இறைவனையும், மறுமையையும் உறுதியாக நம்பிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களோ மனிதனின் உடம்பில் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் அவனது பகிரங்கப் பகைவனான ஷைத்தான் ஓடிக்கொண்டு மனிதனை வழிகெடுத்து நரகில் கொண்டு தள்ளி அதை நிரப்ப கங்கணம் கட்டிச் செயல்படுகிறான். அவனது வலையில் சிக்கியே மனிதன், தானே பாவம், அநீதி, அக்கிரமம், ஓழுக்கமற்ற செயல் என்று பகிரங்கமாக ஒப்புக் கொள்ளும் துர்ச்செயல்களைச் செய்து பாவியாக நேரிடுகிறது என்று கூறிவிடுவார்கள். நிச்சயமாக நாத்திகர்கள் இறைவனையும், மறுமையையும், ஷைத்தானையும் மறுப்பதால் இந்தக் காரணத்தை ஒப்புக் கொள்ளவும் மாட்டார்கள்; சொல்லவும் மாட்டார்கள். அப்படியானால் பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமற்ற செயல் என்று மனிதனே பகிரங்கமாக ஒப்புக்கொண்டுவிட்டு, அடுத்த கனமே அவற்றைச் செய்வதற்குரிய காரணம் என்ன? பகுத்தறிவு செய்வதற்குரிய காரணம் என்ன? பகுத்தறிவு பாதையில் பயிற்சி பெற்ற நாத்திகர்கள் அதற்குரிய காரணம் கூறக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
அடுத்து அவர்களே பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டு விட்டு அதற்கு மாறாக அந்த பாவமான செயல்களை, அநீதியான செயல்களை, அக்கிரமமான, ஒழுக்கமற்ற காரியங்களைச் செய்து கோடி, கோடியாக கொள்ளை அடித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் குவித்து வைத்துள்ளனர். அவர்களுக்கு இன்று மக்களுக்கு மத்தியில் பெருஞ்செல்வாக்கு ஆள், அம்பு, பட்டம், பதவி, பலவித அதிகார ஆதிக்கம், அரசியல் செல்வாக்கு என்று மன்னாதி மன்னர்கள் போல் உல்லாச புரிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வுலகில் வாழ்நாள் பூராவும் அவர்கள் கொள்ளை அடித்து சேர்த்த சொத்துக்கள் அவர்களுக்கு இவ்வுலகை சுவர்க்கப்பூமியாக ஆக்கித் தருகிறது.அவர்கள் செய்த அநீதி, அக்கிரமம், பாவச் செயல்கள், கொலை, கொள்ளைகள் இவை காரணமாக இவ்வுலகில் எவ்வித தண்டனையோ, கஷ்டமோ, துன்பமோ அனுபவிக்காமல் சுவர்க்கவாசிகள் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களைப் பாடையில் வைத்து மண்ணறையில் கொண்டு தள்ளும் வரை அல்லது தீயிலிட்டுப் பொசுக்கும் வரை இன்பமே இன்பம்; மற்றபடி துன்பத்தின் சாயல் கூட படாதபடி வாழ்ந்து மடிகிறார்கள். பகுத்தறிவு நாத்திகர்கள் பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்ட செயல்களைச் செய்தே அவர்கள் இவ்வுலகில் குபேர வாழ்க்கையை- சொர்க்கலோக வாழ்க்கையை அடைந்தார்கள்.ஆனால் அவர்கள் செய்து முடித்த எந்த பாவமான செயலுக்கும், அநீதியான செயலுக்கும், அக்கிரமமான செயலுக்கும், ஒழுக்கமற்ற செயலுக்கும் அணுவத்தனை கூட தண்டனையோ துன்பமோ அனுபவிக்கவில்லை.
மரணத்திற்குப் பின் மனிதனுக்கு வாழ்வு உண்டு என்று உறுதியாக நம்பும் முஸ்லிம்களோ நிச்சயமாக அப்படிப்பட்டவர்கள் இவ்வுலகளில் மக்களையும், அரசுகளையும், அதிகாரிகளையும் ஏமாற்றித் தப்பிக் கொண்டாலும் இறைவனுடைய தர்பாரில் தப்பவே முடியாது. அங்கு வசமாக மாட்டிக் கொள்வார்கள். கடுமையான தண்டனைகள் அவர்களது குற்றச் செயல்களுக்குக் காத்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்லி விடுவார்கள். ஆனால் இறைவனையும், மறுமையையும் மறுக்கும் நாத்திகர்கள் இப்படிச் சொல்ல முடியாது.அப்படியாயின் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கைப்படி இப்படிப்பட்ட பாவமான, அநீதியான, அக்கிரமமான, ஒழுக்கமற்ற செயல்களைச் செய்து வளமான வாழ்வை அமைத்துக் கொண்ட கொடியவர்கள் அதற்குரிய தண்டனையை அனுபவிப்பது எப்போது? பகுத்தறிவு ரீதியாக விடை தரக்கடமைப் பட்டிருக்கிறார்கள்.
ஒன்று புழு, பூச்சி, மிருகம் போன்ற படைப்பினங்களைப் போல், மனிதனும் "வல்லனவற்றின் வாழ்வு வளம்" (Survival of the fittest) என்ற கோட்பாட்டின்படி வாழக் கடமைப்பட்டவன் என்று ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லை அது பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று சொன்னால் இந்த சட்டத்தை வகுத்தளித்த சக்தி எது என்பதையாவது தெளிவு படுத்த வேண்டும்.மேலும் அவர்களே அவர்களது மனட்சாட்சிப்படி பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று அப்பட்டமாக ஒப்புக் கொண்டுவிட்டு மறைமுகமாக அவற்றைச் செய்யத் தூண்டும் சக்தி எது என்பதையும் தெளிவு படுத்த வேண்டும். இப்படி மனட்சாட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டு சொத்துக்களை குவித்து உலகில் குபேர வாழ்க்கை, சொர்க்கலோக வாழ்க்கை வாழ்ந்து மடியும் சண்டாளர்கள் தங்களின் குற்றங்களுக்குரிய தண்டனைகளை அனுபவிப்பது எப்போது? எங்கே? என்பதையும் தெளிவு படுத்த வேண்டும். இந்த எமது சந்தேகங்களுக்கெல்லாம் பகுத்தறிவு ரீதியான விளக்கங்களை அவர்கள் தரவேண்டும், அப்படியானால் மட்டுமே அவர்களைப் பகுத்தறிவுப் பாசறையில் பயிற்சி பெற்றவர்களாக உலகம் ஒப்புக் கொள்ளும். இல்லை என்றால் புறக்கண்ணால் பார்த்தே கடவுளை, மறுமையை ஏற்பேன் என்ற ஐயறிவு வாதத்தையே அவர்கள் முன் வைக்கிறார்கள் என்ற முடிவுக்கே முறையான பகுத்தறிறவை- நுண்ணறிவை உடையவர்கள் வர நேரிடும்.
பாவமான, அநீதமான, அக்கிரமமான, ஒழுக்கமற்ற செயல்களைச் செய்கிறவனின் மனச்சாட்சியே அவனைக் கொள்ளாமல் கொன்று கொண்டிருக்கும்; அதுவே அவனுக்குரிய தண்டனையாகும் என்ற பிதற்றலான, மழுப்பலான, நழுவலான பதிலை அவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கவில்லை. காரணம் இந்த வாதம் உண்மையானால், இவ்வுலகிலும் அதே வாதப்படி அக்குற்றச் செயல்களுக்கு அரசுகளும் எவ்விதத் தண்டனையும் அளிக்கக் கூடாது. அவர்களின் மனட்சாட்சியே அக்கயவர்களை கொல்லாமல் கொள்வதே போதுமானதாகும் என்பதையும் நாத்திகர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்? எதைச் சரிகாணப்போகிறார்கள் நாத்திகர்கள்?
நன்றி: Readislam.net