திங்கள், 11 ஜூலை, 2011

அன்பே உருவான அம்மா…! – பாகம் – 1

அன்பே உருவான அம்மா…! – பாகம் – 1

ஹேம்குமார் அகர்வால்

அன்பே உருவான அம்மா…!

 அல்லாஹ்வுடைய அருளும் பாதுகாப்பும் கிடைத்து நீங்கள் நல்ல சுகமாய் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் எழுதிய அன்புக் கடிதம் என் கரம் கிட்டியது. எனினும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அதற்கு பதில் எழுத தாமதித்து விட்டேன். எல்லாவற்றிற்கும் முன்னர் அதற்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கோருகின்றேன்.

நீங்கள் என்னைப் பற்றி கொண்டுள்ள எண்ணமும் என் நலனில் கொண்டுள்ள அக்கறையும் மகத்தானவை. அதேபோன்று, நான் என்னுள்ளத்தில் தேக்கி வைத்துள்ள உங்கள் மீதான அன்பும், பாசமும் வார்த்தைகளில் வடித்துக் கூற முடியாதவை.

உங்கள் அன்பு நிறைந்த முகத்தைக் காண ஓடோடி வர வேண்டும் என என்னுள்ளம் அவாவுறுகின்றது. எனினும், நான் பெற்றுவரும் சன்மார்க்க கல்வி என்னைத் தடுத்து நிறுத்துகின்றது. இந்த தடை இல்லாவிட்டால் நான் ஒரு கணமும் உங்களை விட்டுப் பிரிந்திருக்க மாட்டேன். உண்மையில், மார்க்கத்தைக் கற்பதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் நான் உணர்ந்திருப்பது தான் நான் உங்களைப் பரிந்திருப்பதை சகித்துக் கொள்ளச் செய்கின்றது. இருப்பினும் உங்களைப் பற்றிய நினைவால் என் நெஞ்சம் நிறைந்திருக்கின்றது. நான் கழிக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் நீங்கள் என்மீது வைத்துள்ள வரையறையற்ற அன்பை, கருணையை எண்ணிப்பார்க்கிறேன்.

நீங்கள் என்மீது செலுத்தும் அளவற்ற கருணைக்கும், எனக்காகக் காலமெல்லாம் செய்த தியாகங்களுக்கும் நான் எப்படித்தான் கைம்மாறு செய்வேனோ? உங்கள் தன்னலமற்ற உதவி ஒத்தாசைகளை என் நாவினால் எப்படித்தான் வர்ணித்து முடிப்பேனோ? உங்கள் முடிவேயில்லாத அன்புடன் கூடிய மகத்தான பணிகளுக்கு எந்த விதத்தில் பிரதி உபகாரம் செய்வேனோ? நான் அறியேன்!

என் அகம் நிறைந்த அம்மா!

நீங்கள் எப்பொழுதும் வேதனையுடனும் வடித்த கண்ணீருடனும் சொல்லும் சில விஷயங்கள் என் உள்ளத்தில் சதா எதிரொலித்துக் கொண்டுள்ளன. அவற்றிற்காக நான் கவலைப்படாத நாளே இல்லை எனலாம்.

நீங்கள் கூறுவீர்கள்:

‘என் தங்க மகன் என்னை விட்டுப் போய்விட்டான், தவறான பாதையின்பால் அழைத்துச் செல்லப்பட்டு விட்டான். சோதிடர் கூறியது போலவே என் மகன் எனக்கு இல்லாமலாகி விட்டான்’ என்று.

அம்மா! இவற்றை நான் எப்பொழுதும் நினைத்துப் பார்க்கிறேன். ஏனம்மா இப்படி என்னைப் பற்றி வேதனைப் படுகின்றீர்கள்? எனது எந்தச் செயல் உங்களுக்கு இப்படியான வருத்தத்தைத் தருகின்றது? இப்படி அச்சத்தைத் தோற்றுவிக்கின்றது? இப்படி பலமுறை எண்ணிப் பார்த்தது உண்டு.

சொல்லுங்கள் தாயே! நான் செய்த குற்றம் என்ன?

‘அல்லாஹ் ஒருவன் தான் உண்மையான படைப்பாளன்’ என்று நான் ஏற்றுக் கொண்டது குற்றமா?

இறுதி நபிகளார் மீது இறுக்கமான விசுவாசங் கொண்டேன். அது நான் செய்த குற்றமா?

என் வாழ்வு முழுவதையும் இறை கட்டளைக்கு இணக்கமான முறையில் அமைத்துக் கொள்ள விழைந்தேனே, அதுதான் என் குற்றமா?

‘அல்லாஹ்வை புகழ்கின்றேன், அவனுக்கு இணையான எதுவுமே இல்லை’ என நான் உறுதியான இறை விசுவாசம் கொண்டதுதான் என் குற்றமா?இல்லையெனில்,‘எமக்கு உணவளித்து வாழ வைக்கும் இறைவன் அந்த அல்லாஹ்தான்’ என மனப்பூர்வமாக ஏற்றேனே, அதுதான் நான் செய்து விட்ட, உங்கள் மனதைக் குடையும் குற்றமா?

அன்புத்தாயே! இந்த வாழ்வு, இதில் காணப்படும் எண்ணற்ற வசதிகள், காற்று, நீர், உணவு, உடை ஆகிய அனைத்துமே அல்லாஹ்வின் அருட்கொடைகள். நிச்சயமாக இந்த வாழ்வும் உலகமும் என்றோ அழிந்து விடும். இப்படி அழிந்து போகும் எம்மை, அல்லாஹ் மீண்டும் உயிர் தந்து எழச் செய்வான். எமக்கு இவ்விஷயத்தில் வாழும் வாய்ப்பைத் தந்த அவனுக்கு ‘நாம் எப்படி வாழ்ந்தோம்’ எனக் கேட்கும் உரிமை உண்டு என்பதை நான் திடமாக நம்புகின்றேன்.

அவன் தந்த சட்ட திட்டங்களுக்கும் வாழ்க்கை முறைக்கும் ஏற்ப வாழாதவர்கள் நரகில் எறியப்படுவர், அங்கு அவர்கள் மிகக் கடுமையான வேதனைகளை அனுபவிப்பர். இந்த உண்மைகள் யாவற்றையும் எத்தகைய சந்தேகமுமின்றி முழு மனதோடு ஏற்றுக் கொண்டது நான் செய்த குற்றமா?

‘நரக நெருப்புக்கு இரையாகாது இறை சட்டங்களுக்கு ஏற்ப இயங்கி சுவனத்தைப் பெற வேண்டும்’ என உறுதி பூண்டு செயற்படுகின்றேனே – இது குற்றமா?

‘எல்லாவற்றையும் படைத்து பரிபாலித்து வரும் அல்லாஹ், தனது இறுதித் தூதரான நபி (ஸல்) அவர்கள் மூலம் அருளிய ஆணைகள் யாவற்றையும் நெஞ்சம் நிறைத்து பின்பற்றுவேன், அவன் ‘கூடாது’ என தடுத்த பாவச் செயல்களிலிருந்து முற்றாக ஒதுங்கி நிற்பேன்’ என்ற முடிவோடு வாழ்வை அமைத்துக் கொள்ள முற்படுகின்றேனே – இதை குற்றம் என்கிறீர்களா?

ஆமாம் தாயே! உங்கள் கண்ணோட்டத்தில் நான் செய்த குற்றங்கள் இவைதான்! உங்களது வேதனைக்கும் வெறுப்பிற்கும் காரணமாகி இருப்பவை இத்தகைய என் குற்றங்களே!

சுருக்கமாகச் சொல்கிறேன்:

உண்மையான இறைவனுக்கு உளப்பூர்வமாக அடிபணிந்து வாழும் ஒரு முஸ்லிமின் வாழ்வுதான் என் வாழ்வு. என் செயல்கள் யாவும் அப்படித்தான் அமைந்துள்ளன. எவர் தனது வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் எல்லாக் கட்டங்களிலும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு இணக்கமாக வாழ்கிறாரோ அவர்தான் ‘முஸ்லிம்’ என அழைக்கப்படுவர். அதனை நன்கு உணர்ந்தவன் நான், எனவே, இறைவன் ‘வேண்டாம்’ என தடுத்துள்ள பாவச் செயல்களிலிருந்து நானும் ஒதுங்கி வாழ முயற்சிக்கின்றேன்.

தொடரும்...
நன்றி:இஸ்லாமியதாவா.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக